பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

சுந்தர சண்முகனார்


குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த கங்கைக்குப்

பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

குன்றவரின் இயங்களும் பூசனை முறைகளும், இப்பகுதியில், அடிமேல் அடித்தாற்போல் தொடர்ந்து இடம் பெற்றுப் படிப்பவரை மகிழ்விக்கின்றன.

இது நகையாகின்றே

தலைமகன் ஒருவனோடு காதல் கொண்ட தலைமகள் ஒருத்தி, விரைவில் மணம் கூடாமையால் மிகவும் வாடி வதங்கி மெலிந்து காணப்படுகிறாள். இந்தக் காதல் திருவிளையாடலை அறியாத தலைவியின் தாய், தன் பெண்ணை ஏதோ தெய்வம் தீண்டி அச்சுறுத்தி விட்டது என்று எண்ணி, வேலன் வெறியாடல் செய்யத் தொடங்குகிறாள்; அத்தெய்வம் முருகன் என எண்ணுகிறாள். தாய் முருகனுக்குப் பூசனை போடுவாள்; முருகன் ஏறிய வேலன் என்னும் சாமியாடியை அழைத்து, மகளின் நோய்க் காரணத்தை அறிந்து சொல்லச்செய்து அது தீர்க்கும் வழியையும் அறிவிக்கச் செய்வாளாம். வேலன் என்பவன் மேல் முருகன் ஏறி எல்லாம் கூறுவானாம். இதற்குத் தமிழ் அகப்பொருள் துறையில் வேலன் வெறியாட்டு என்பது பெயராகும்.

தலைவி தோழிக்குச் சொல்லுகிறாள். தோழியே என் காதலனால் உண்டான நோயை முருகனால் உண்டான நோயாக அன்னை எண்ணி, வெறியாடும் வேலனை வரச் சொல்லியுள்ளாள். இது நகைப்புக்கு உரியது தோழியே! (இது நகையாகின்றே தோழீ).