பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

405


இல்லம்’ என - பல மாடுகள் இருக்கும் வீடு எனக் கூறப்பட்டிருப்பதால், ஒரு மாடாவது வீட்டுக்கும் தெருவுக்குமாகப் போய்வந்து கொண்டிருக்கலாமல்லவா? புதுச்சேரியில் நான் இருக்கும் வீட்டின் அருகில் காலை முதல் மாலை வரை சிலருடைய மாடுகளின் காட்சியைக் காணலாம்.

காரணம்: பொற்கொல்லன் தன்னைச் சேர்ந்தவர் பலர் சூழ வந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்திலே தான் அரண்மனை வேலை முடித்துப் பலரும் வீட்டுக்குத் திரும்பி யிருக்கலாம்.

மறுப்பு: ஏன், இவர்கள் காலையில் வேலைக்குப் புறப்பட்டுப் போவதாய் இருந்திருக்கக் கூடாதா?

காரணம்: மாலையில்தான் வேலை முடித்து ஒரே நேரத்தில் கும்பலாய் வர முடியும். காலையில் ஒவ்வொருவராகப் போயிருப்பார்கள்.

மறுப்பு: மாலையிலும் எல்லாரும் கும்பலாக வர வேண்டுமா? வேலை முடிந்ததும், அவரவரும் தனித் தனியாகத் தத்தம் வீடு நோக்கிச் செல்ல மாட்டார்களா? எல்லாரும் ஒரே இடத்திலா குடியிருந்தார்கள்?

காரணம்: இருட்டிய பிறகு யாருக்கும் தெரியாமல் கொலை செய்வதே எளிது.

மறுப்பு: அரச ஒறுப்பு (இராசத் தண்டனை) இரவிலே தான் நடக்குமா - நடக்க வேண்டுமா? பகலில் நடந்திருக்கக் கூடாதா?

காரணம்: பணம் ஈட்டக் கால இடைவெளி கூடாது; அதனால் முதல்நாள் மாலை உணவு கொண்டதுமே புறப்பட்டு விட்டான்.

மறுப்பு: ஓர் இரவு பொறுக்க முடியாதா? மறுநாள் காலையில் விற்கக் கூடாதா? புது ஊரில் இரவில் நகை விற்பதனினும் பகலில் விற்பதே காப்புடையதாகும்.