பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஊழ் வினை

ஊழின் வலிமை

சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது. ஊழ்வினையில் நம் நாட்டு மக்களுள் பெரும்பாலார்க்கு மிக்க நம்பிக்கை உள்ளது. இந்து, சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றன. திருவள்ளுவர் திருக்குறளில் ‘ஊழ்’ என்னும் தலைப்பு இட்டுப் பத்துப் பாடல்களில் ஊழ்வினை நம்பிக்கையை ஊட்டியுள்ளார் எனலாம். மக்கள், என்ன சூழ்ந்து எவ்வளவு சூழ்ந்து ஒரு செயல் புரிய முயன்றாலும் ஊழ்வினையின் படியே நடக்கும்; ஊழினும் வலிமையுடையது ஒன்றும் இல்லை என்னும் கருத்தில் பாடியுள்ள

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்” (380)

என்னும் ஒரு குறளே போதுமே! மற்றும், சோர்வு இன்றி ஊக்கத்துடன் விடாது தொடர்ந்து செயலாற்றுபவர்கள் ஊழையும் அப்பால் தள்ளி வென்றுவிடுவர் என்னும் கருத்துடைய

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்” (620)

என்னும் குறளையும் வள்ளுவர் பாடியுள்ளார். ‘ஊழையும்’ என்பதில் உள்ள ‘உம்’ உயர்வு சிறப்பு உம்மையாகும். வெல்ல முடியாத ஊழையுங்கூட வெல்வர் என்பதிலிருந்து, ஊழ் வெல்ல முடியாதது என்பது பெறப்படுகின்றது.