பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சுந்தர சண்முகனார்


ஊழ் - விளக்கம்

ஊழ் என்பதுதான் என்ன? முன் பிறவியில் நல்லன. செய்திருப்பின் இப்பிறவியில் நல்லன நடக்கும்; முன் பிறவியில் தீயன செய்திருப்பின் இப்பிறப்பில் தீயனவே நேரும். இதே போல, இப்பிறப்பில் நல்லன புரியின் அடுத்த பிறப்பில் நல்லனவே நடைபெறும்; இப்பிறப்பில் தீயன செய்யின் அடுத்த பிறவியில் தீயனவே நேரும் - என்பது தான் ஊழின் விளக்கம்.

ஊழின் கண்டு பிடிப்பு

முற்பிறவியில் நல்லனவோ - தீயனவோ செய்தது எவ்வாறு இப்பிறப்பில் தெரியும்? இது போலவே அடுத்த பிறப்பில் நல்லனவோ - தீயனவோ நடக்கப் போவது இப்பிறவியிலேயே எவ்வாறு தெரியும்?

முன்னோர்கள் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள் - இப்பிறவியில் நல்லன செய்பவன் துன்புறுகிறான் - தீயன செய்பவன் இன்புறுகிறான் - இதற்குக் காரணம் என்ன?- என்று பல நாட்கள் - பல்லாண்டுகள் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். அதற்குச் சரியான - பொருத்தமான விடை கிடைக்கவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் ஒரு முடிவுக்கு வரலாயினர். அதாவது:- இப்பிறவியில் நல்லது பெறுபவன் முற்பிறப்பில் நல்லது செய்திருக்கலாம்; இப்பிறவியில் தீயது பெறுபவன் முற்பிறவியில் தீயது செய்திருக்கலாம். இதேபோல, இப்பிறவியில் நல்லது பெறுபவன் தீயவனாய்த் தீயது செய்தால் அடுத்த பிறவியில் தீயது பெறுவான்; இப்பிறவியில் தீயது பெறுபவன் நல்லவனாய் நல்லது செய்யின் அடுத்த பிறவியில் நல்லது பெறுவான் - என உய்த்துணர்வாக - ஊகமா - உத்தேசமாக ஒரு முடிவுக்கு வந்தனர். இத்தகைய சூழ்நிலைகட்கு ‘ஊழ்’ என்ற ‘மகுடமும்’ சூட்டிவிட்டனர்.