பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

53


திருவள்ளுவரின் திணறல்

திருவள்ளுவரே ஓரிடத்தில் திணறியுள்ளார். பொறாமை கொண்ட தீய நெஞ்சுடையவனுடைய வளர்ச்சியும், பொறாமையற்ற நல்ல நெஞ்சத்தவனின் கேடும் இயற்கைக்கு மாறாயிருத்தலின், இந்தச் சூழ்நிலை எண்ணி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் - என்னும் கருத்தமைந்த

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப்படும்” (169)

என்னும் குறளை இயற்றியுள்ளார். முன்னோர்கள் இந்த அடிப்படையிலேயே, ஊழ் என்னும் இல்லாத ஒன்றை - பொருந்தாத ஒன்றைப் புதிதாய்க் கண்டுபிடித்து வழி வழியாக மக்களின் தலையில் சுமத்திவிட்டுப் போய் விட்டனர்.

பொருத்தமான தீர்வு

ஒரு பிறவியிலேயே முன்னால் நல்லது செய்தவன் பின்னால் நல்லது பெறுவான்; முன்னால் தீயது செய்தவன் அப்பிறவியிலேயே பின்னால் தீயது பெறுவான். இவ்வாறு ஒரு பிறவிக்குள்ளேயே முன்னால் செய்யப்பெறும் நல்லன - கெட்டனவற்றிற்கு ‘ஊழ் வினை’ என்னும் பெயர் பொருந்துவதாகும். இந்தக் கருத்தை ஒளவைப் பாட்டியும் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனக் கொன்றை வேந்தனில் (74) கூறியுள்ளார். திருவள்ளுவரும், முற்பகலில் பிறர்க்குத் துன்பம் செய்யின், பிற்பகலில் தங்கட்குத் துன்பங்கள் யாரும் செய்யாமலேயே தாமாகவே வந்து சேரும் - என்னும் கருத்தில்,

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்”