பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

85


என்னும் அடி, சிலப்பதிகாரத்திலும் (11 ஆம் அடி) அப்படியே இருப்பது எண்ணத் தக்கது.

மற்றொரு கதை வருக. இந்திரன் ஏவ உருப்பசி நடம் ஆடினாள். இந்திரன் மகனும் அப்போது ஒருவரை ஒருவர் நோக்கிக் காதல் குறிப்பு கொண்டதால், ஆடல் பாடல் எல்லாம் கெட்டு விட, உருப்பசியை அகத்திய முனிவர் கெடுமொழி (சாபம்) இட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தாராம்.

“நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடங்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்கா ளாகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்

தங்குக இவளெனச் சாபம் பெற்ற...”
(18-23)

என்பது பாடல் பகுதி. இதில் சுட்டப்பட்டுள்ள முழுக் கதையாவது:

இந்திரனது அவைக்கு அகத்திய முனிவர் வந்தார். பாடலுடன் ஆடும்படி இந்திரன் உருப்பசியைப் பணித்தான். ஆடும் போது உருப்பசியும் இந்திரன் மகன் சயந்தனும் காதல் உணர்வுடன் நோக்கிக் கொண்டனர். அதனால் ஆடலும் பாடலும் முறை தவறின. அதனால், நாரதன் பகை நரம்பு பட வீணை மீட்டினான். இவற்றைப் பொறுக்க முடியாத அகத்தியர் சினம் கொண்டு, நாரதன் வீணை மண்ணிலே மணையாய்க் கிடக்கவும், உருப்பசி மண்ணுலகில் பிறக்கவும், சயந்தன் பூவுலகில் மூங்கிலாய்த் தோன்றவும் வைவு (சாபம்) இட்டனர். பின்னர் அவர்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் வைவு நீக்கல் (சாப விமோசனம்) செய்தார் - என்பது கதை.