பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

87


தந்திரி உவப்பத் தந்திரி நாரில்
பண்ணிய வீணை மண்ணிசைப் பாடி
ஈண்டு வருகெனப் பூண்ட சாபம்
இட்டஅக் குறுமுனி ஆங்கே

விட்டனன் என்ப வேந்தவை அகத்தென்

என்பது பாடல். நேரிசை ஆசிரியப் பாவாகிய இந்தப் பாடலும், சிலப்பதிகாரக் காதைகள்போல் ‘என்’ என்னும் ஈற்றில் முடிந்திருப்பது எண்ணத் தக்கது.

மற்றும், சிலம்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புராணக் கதைகள் சிலவற்றின் குறிப்புகள் வருமாறு:

தேவர் வேண்டியதால் சிவன் திரிபுரம் எரித்தது. கண்ணன் கம்சனையும் வாணாசுரனையும் வென்றது. முருகன் சூரனை வென்றது. கொற்றவை அவுணரை வென்றது. காமன் பேடிக் கூத்து ஆடியது. மாலதி மாற்றாள் மகவை இழத்தல் - பேய் பறித்தல் பாசண்டைச் சாத்தன் குழவியாய் வந்து தேவந்தியை மணத்தல். பாண்டியன் கடல் கவற வேல்விட்டது. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது. பாண்டியன் முகிலைத் தடுத்துத் தளையிட்டது. நளன் மனைவியைப் பிரிந்து காடு ஏகியது. இராமன் மனைவியைப் பிரிந்து காடு போந்தது. இந்திரன் மலைச் சிறகை அரிந்தது.

கண்ணன் குருந்து ஒடித்தது; கன்று குணிலாக் கனி உகுத்தது; நப்பின்னையை மணந்தது; கடல் கடைந்தது; மண் உண்டது; வெண்ணெய் உண்டது: அடியால் உலகு அளந்தது; பாண்டவர்க்காகத் தூது போனது.

முருகன் கிரவுஞ்ச மலை பிளந்தது; கடல் பிளந்து சூரனைக் கொன்றது - முதலிய புராணக் கதைகள் பல கூறப்பட்டுள்ளன.