பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


நாதனார் வயிரவநாதருக்கும் - சீதமலர் நல்லமங்கை பாகருக்கு நம்பும் வயிரவர்க்கும் வல்ல திருக்கோட்டி மாதவருக்கும் - கல்லியன்முன் மண்டபம் நெய்விளக்கு மாமதிலும் வாகனமும் தண்டலையு வில்லத் தளமலர்கள் - கொண்டதோர் நித்திய நைமித்தியம் நேயமாய்தானடக்க பத்தியுடனே யமைத்த பண்பினான்..."

என்று பிரதானியின் பணிகளை அடுக்கிச் சொல்கிறார் கவிராயர்.[1]

மற்றும், பாகனேரிக்கு அடுத்து முத்து வடுகநாத சத்திரம் என்ற குடியிருப்பு, சோழபுரத்திற்கு மேற்கே திரியம்பகப் பொய்கை, பரம்பைக் குடியில் மடம், சத்திரம், கொடிகட்டி அன்னம் கொடுத்தோன் எனப் புகழ்ந்துரைத்துள்ளார்.

பிரதானி தாண்டவராயபிள்ளையின் மரணம், தமக்கும் சிவகங்கைச் சீமைக்கும் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என்பதை ராணி வேலுநாச்சியார் உணர்ந்தார். வேதனையால் துடித்தார். கணவரது வீரமரணத்திற்கு பிறகு அவரையும் அவரது குழந்தையையும், காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த இலக்கினை கொண்டிருந்தவர் அல்லவா அவர்? அவரை நம்பித்தானே இந்த அந்நிய மண்ணாகிய விருப்பாச்சி சீமையில் வாழ்ந்து வருவது? விருப்பாச்சி வாழ்க்கைக்கு மைசூர் மன்னரது அனுதாபமும் ஆதரவும் பின்னணியாக இருந்த போதிலும், விரைவில் தாயகம் திரும்பி விடலாம் என்ற வலுவான நம்பிக்கையை வளர்த்து ஊக்குவித்து வந்ததும் இந்த பிரதானி தானே? ஆற்காட்டு நவாப்புக்கு எதிராக சிவகங்கை மக்களைத் திரட்டும் கடுமையான முயற்சியில் காலமெல்லாம் ஈடுபட்டு இருந்தபோதும், வாரம் தவறாமல் விருப்பாட்சிக்கு வந்து, சிவகங்கைச் சீமையின் நடப்புகளை ராணியாருக்கு தெரிவிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அவர் விட்டு சென்ற முயற்சிகளை, அவர் வரைந்துள்ள திட்டத்தை எவ்விதம் நிறைவு பெறச் செய்வது, எத்தகைய வழி முறைகளைக் கையாளுவது?

இரவு பகலும் இதே சிந்தனையில் ராணிவேலு நாச்சியார் லயித்து இருந்தார். மிகுந்த உள்ளத்துணிவுடன் உணர்வு பூர்வமாக மறவர் சீமையின் மண்ணுக்கும் மரபுக்கும் உகந்த வகையில் ஒரு முடிவினைக் காண முயன்று வந்தார். வீரத்தின் பரிசாக உருவான சிவகங்கைச் சீமையை, மீண்டும் சுதந்திர நாடாக மாற்றாவிட்டால் அங்குள்ள மக்களின் எதிர்காலம் என்னவாகும்? இதற்கு விடை அரசியலில் ராணியார் நேரடியாக ஈடுபடுவதுதான்? ஆம். அப்படித்தான், ராணிவேலு

  1. குழந்தைக் கவிராயர் மான் விடு தூது (டாக்டர் உ.வே.சா. பதிப்பு)