பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


இந்த அழுத்தமான நினைவுத் திரட்டுகளினால் தானோ என்னவோ ராணி வேலுநாச்சியார், சிவகங்கை அரண்மனையில் தொடர்ந்து வாழாமல், அரண்மனை சிறுவயலில் உள்ள தமது மூதாதையரது மாளிகையில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தார் எனத் தெரிய வருகிறது.

ஆயுத பலத்தின் மூலம் மக்களை அடக்கி ஆளமுடியும் என்ற நவாப்பினது அரசியல் கொள்கைக்கு கிடைத்த மரண அடி இது. சிவகங்கைச் சீமையை ராணி வேலுநாச்சியார் மீட்டிய பொழுது மைசூர் மன்னர் ஹைதர் அலி, நவாப்பையும் பரங்கியரையும் அழித்து ஒழிக்கும் திட்டத்தை அமல்படுத்தும் நிலையில் இருந்ததால் சிவகங்கை அரசை வேறு வழியில்லாமல் அங்கீகாரம் செய்தார். வீரத்தியாகி முத்துவடுகநாதர் நினைவுகள் அவரது நெஞ்சத்தை அழுத்தின. என்றாலும் மக்களது ஆரவாரம் சிவகெங்கை சீமைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை அவருக்கு நினைவூட்டியது. மிகவும் எளிமையான விழாவில் தனது மகள் இளவரசி வெள்ளைச்சியை சிவகங்கை அரசின் அரியணையில் அமரச் செய்து, முடிசூட்டியதுடன் பிரதானி தாண்டவராய பிள்ளையின் மறைவுக்கு பின்னர் அரசியாரையும், இளவரசியையும் அக்கரையுடன் காத்து உதவி வந்த பணியாளர்களான மருது சகோதரர்களை சீமையின் பிரதானிகளாக நியமனம் செய்து அறிவிப்பு செய்தார்.[1] ஸ்ரீரங்க பட்டினத்திற்கும், திண்டுக்கல்லுக்கும் ஓலைகள் அனுப்பி வைத்தார். காலத்தால் செய்த நன்றிக்கு காலமெல்லாம் சிவகங்கைச் சீமை மக்களும் மைசூர் ஐதர்அலிக்கு நன்றிக்கடப்பாடு உடையவராக இருப்பர் என்பதை அதில் தெரிவித்து இருந்தார். பக்கத்து நாட்டு தொண்டமான் பகைமையுடன் நடந்து கொள்ளும் பொழுது, பல நூறு மைல் தொலைவில் உள்ள கன்னட நாட்டு மன்னர் ஐதர் அலி எவ்வளவு பெரிய உதவியை செய்துள்ளார் எண்ணிப் பார்க்கவே அவரால் இயலவில்லை!

நாட்கள் மெதுவாக நழுவிக் கொண்டிருந்தன. சிவகங்கை சீமையில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டது. மக்கள் அச்சமும் தயக்கமும் இன்றி தங்களது தொழில்களைத் தொடர்ந்தனர். திருநெல்வேலிச் சீமையில் இருந்து துணிமணிகளும் மதுரையில் இருந்து தட்டு முட்டு சாமான்களும், தஞ்சையில் இருந்து நெல் முதலான தானியங்களும் கொண்டு வரப்பட்டு சிவகங்கை பேட்டையில் நிறைந்து இருந்தன. காளைநாதர் கோயிலிலும், திருக்கோலக்குடியிலும் நிகழ்ந்த வசந்த விழாக்களில் மக்கள் பெரும் திரளாக கூடினர். சிராவயலிலும், அரளிப் பாறையிலும் மஞ்சு விரட்டு விழாக்களில் காளைகளை அடக்க இளைஞர்கள் கூட்டம் முனைப்புடன் முன் வந்தனர். சீதளியிலும் சேவல் பட்டியிலும் நடைபெற்ற பூச்சொரிதல் விழாக்களில் பூவையர் பூத்தட்டுகளை தாங்கி பொலிவுடன் சென்றனர்.


  1. Correspondence on the permanent settlement of Southern pottams and Ramnad and Sivagangai Zamindaris. P: 28