டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 111
ரூபாய்) நவாப்பிடமிருந்து வசூல் செய்தனர். இத்தகைய மீளாக்கடன் வலையில் சிக்குண்ட நவாப்பின் மீட்சிக்கு வழி இல்லையென்பதைத் தெளிவாக கும்பெனியார் உணர்ந்து இருந்தனர். ஆதலால் கர்நாடக ஆட்சித் தலைமையை வெகு விரைவில் கைப்பற்ற இருப்பதை எதிர்பார்த்து நவாப்பிற்கு கட்டுப்பட்ட தலைவர்கள், மன்னர்கள் ஆகிய இந்த மண்ணின் அதிபதிகளை இப்பொழுது இருந்தே இணக்கமாக வைத்துக் கொள்ள விரும்பியதே அந்த சிறப்பான காரணமாகும்.
ஆதலால் சிவகங்கை மன்னர் செலுத்த வேண்டிய ஆண்டுக் காணிக்கைத் தொகை ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து ரூபாய் ஒன்றே முக்கால்லட்சம் என குறைத்து உத்திரவிட்டது:[1]அவர்களுக்கு நவாப் செலுத்த வேண்டிய பாக்கியை இந்த தொகை நிர்ணயம் எந்த வகையிலும் பாதிப்பது இல்லையல்லவா? புதிய ஆட்சியாளர்களாக மாறப்போகும் அவர்கள் நவாப்பை விட "மிகவும் நல்லவர்கள்' என்பதை காட்டிக் கொள்ளவும் இந்த நடவடிக்கை அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது. இவ்விதம் முனைப்புடன் சீமை நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரது ஆர்வத்தை திசை திருப்பும் வழியில் மிகப் பெரிய சோதனை அவருக்கு காத்து இருந்தது. அண்மையில் பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்த அவரது மனைவி ராணி வெள்ளச்சி நாச்சியார் தனது குழந்தையுடன் திடீரென மரணமுற்றார்.[2] இது ஒரு அரசியல் படுகொலை என மக்களால் கருதப்பட்டது. ராணி வெள்ளச்சி விஷமிட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக அரண்மனையில் பேச்சு எழுந்தது. என்றாலும் சோகத்தினால் துடித்த மன்னர், ராணியின் மரணம் எப்படி ஏற்பட்டது என்ற விவரங்களைப் பெறும் விசாரணையில் ஈடுபடாமல், இந்த நிகழ்ச்சியின் பின் விளைவுகளைத் தவிர்ப்பதில் ஈடுபட்டார். “பொற்றாலியோடு எவையும் போம்" என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க எழுந்த சோகச் சூழ்நிலை மன்னரது இயல்பான நடவடிக்கை அனைத்திலும் நிழலாடியது.
மறுமணம்
மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரது சொந்த நலன்களை கவனிக்கவும், அவரது சோகத்தை ஒரளவு போக்கி நிர்வாகப் பணியில் மன்னரை ஈடுபடுத்த, என்ன செய்யலாம் என பிரதானிகள் ஆலோசித்தனர். மன்னரது மறுமணம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லை! மன்னருக்கு மறுமணம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மன்னரது ஒப்புதல் பெற்ற, பெரிய மருது சேர்வைக்காரர், சில நாட்களில்