பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 197


ஆகியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அக்கிரம நடவடிக்கைகளால் ஆறுதல் அடையாத அன்றைய அரசாங்கம், தேசியத் தொண்டர்களான சிவகங்கை கே.இராமசாமி, சிவகங்கை பி.சுப்ரமணியன் ஆகியவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு உத்திரவிட்டது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பெண்மணிகளிடம் மிருகத்தனமாக நடந்து பெண்மைக்கு பழியும் பாதகமும் சேர்க்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. ஊர்கள் தோறும் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, ஊர்மக்களிடம் மொத்தமாக கூட்டு அபராதத் தொகை என்ற தண்டத் தீர்வையை வசூலித்தது. இப்படி வசூலிக்கப்பட்டது ரூ.2,93.000/- எனக் குறிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் வேறு எங்குமே நடந்திராத வகையில் இராமநாதபுரம் சீமை, திருவாடனைக்கு அடுத்து சிவகங்கைச் சீமையில்தான் இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் தீவிரமான பொது மக்களது ஆவேசம் மிக்க இயக்கமாக பரிமளித்துள்ளது. இந்த சீமை மக்கள் நாட்டுப்பற்றுடனும், வீரமறவரது வழியில் நின்று தேசத் தொண்டிற்கு தங்களைப் பரிபூரணமாக அர்ப்பணித்து இருப்பதை வரலாற்றில் காண முடிகிறது.

இதந்தரு மனையினிங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திருவிரண்டுமாறி பழி மிகுத்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விழைந்தெமை அழித்திட்டாலும், சுதந்திர தேவி நின்னைத் தொழுவதை மறக்கிலேன் என்று பாடி மறைந்த பாரதியின் வாக்கினுக்குரிய வீரவடிவங்களாக வரலாறு படைத்து வாழ்ந்து மறைந்தவர்கள் இந்தச் சீமை மக்கள். நமது நாட்டு விடுதலைக்குப் போராடிய இந்த தியாகிகளில் சிலர் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு நமது நன்றி நிறைந்த வணக்கங்கள் என்றும் உரியது.