பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108சீவக சிந்தாமணி



காதல் என்ற ஆபத்துக்கு ஏதாவது இப்படி விபத்துகள் தேவைப்படுகின்றன என அவன் அறிய முடிந்தது.

“அவள் நட்டு வைத்த முல்லை முளைவிட்டு நகை காட்டியது. அதைக் காண இவள் ஓடோடிச் சென்றாள். வழியில் ஒரு குரவம் பூத்து அழகு தந்தது. வண்டுகளும் தேனீக்களும் அதைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அது அவளைக் கவர்ந்தது. பூவைப் பறிக்க அருகில் சென்றாள்; அப்பொழுதுதான் அரவு வந்து அவளைக் கரவு செய்தது” இந்தச் செய்தி அங்குப் பேசப்பட்டது. இவை உலோகபாலன் கேட்டு அறிந்தான்.

“நல்ல காலம்; இந்தப் புதிய இளைஞனால் அவள் பிழைத்தாள்” என்று அவன் மகிழ்ந்தான்.

கோயில் சிலைகளைக் கண்டிருக்கிறாள்; அங்குத் தூண்களில் ஆண்வடிவம் என்றால் அவள் அவற்றைக் காண்பதை அவள் நாணம் தடுத்தது. அத்தகையவளின் நாணம் அவளிடம் தங்குவதற்கு நாணி அவளை விட்டு அகன்றது. நிறையை விளித்தாள்; என்குறையைத் தீர்க்காத நீ என்னைவிட்டு விலகு என்று அதற்கு விடுதலை அளித்தாள்; அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் படித்த படிப்பை எல்லாம் பறக்க விட்டது.

அவள் நிலை கொள்ளவில்லை; அவன் அந்தப்பக்கம் வந்தால் பார்க்கலாமே என ஆசைப்பட்டாள். அவன் காலடி சப்தம் ஏதாவது கேட்டாலே ‘யாரடி போய்ப்பார்’ என்று தன் தோழியை அனுப்பிவைத்தாள். அவனுக்காகத் தன் தமையன் அழைத்த விருந்துக்கு அடுக்களையில் இருந்து அவளே சமைத்து அனுப்பினாள்.

“சமையல் நன்றாக இருந்தது” என்றான்.

“என் தங்கையின் கைத்திறன்” என்றான்.