பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேமசரி இலம்பகம்119



“சுபத்திரன் கடை என்றால் எவரும் சொல்லி விடுவார்கள். காதில் கடுக்கன் போட்டிருப்பார். அவருக்கு ஒரே பெண், கேமசரி என்பது அவள் பெயர்; எங்கள் ஊர்க்கூந்தல் தைல வியாபாரிகள் அவள் படத்தைப் போட்டுத்தான் விளம்பரம் செய்கிறார்கள்; கூந்தல் அழகி அவள்.”

“நாங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தோம். எங்களை எல்லாம் பார்த்தால் அவளுக்கு ஆண்பிள்ளைகளாகப் படவில்லை. நீ போய்ப்பார்; வாழ்த்துகிறோம்” என்று சிரித்துப் பேசி அவனுக்கு அந்தக் கடைக்குச் செல்வதற்கு வழி காட்டினார்கள்.

அவர்கள் தூண்டியதால் இதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டான்.

கடைத்தெரு வழியாக நடந்தான்; அந்தத் தெருவிலேயே அதுதான் பெரிய கடையாக இருந்தது. சரிகைத் தலைப்பாகை கட்டியிருந்தார்; திலகர் போன்ற கட்டு அது. பச்சையப்பரும் அப்படித்தான் கட்டி இருந்தார். ஏன் வ.உ. சிதம்பரனாரும் தலைப்பாகை வைத்திருந்தார் என்று தெரிகிறது. இவன் போனவுடன் அதை மாட்டிக் கொண்டு இருந்தார். அவர் வழுக்கைத்தலை; அதனால் இது அதை மறைக்க அமைந்த சாதனமாகத் தெரிந்தது. தொப்பி, தலைப்பாகை இவற்றின் சரித்திரமே இதுதான் என்பதை அறியமுடிந்தது. அவர்கள் சொன்னபடி காதில் கடுக்கன் கலங்கரை விளக்கமாக இவனுக்கு அடையாளம் காட்டியது. அந்தக் கடைதான் என்று முடிவு செய்தான். நிறம் சிவப்பு; நிச்சயம் இவனுக்கு மகள் ஒருத்தி அழகாக இருப்பாள்; அவள் சிவந்திப்பூ என்று கற்பனையில் கண்டான்; அவள் இனிக் காணப்போகும் மத்தாப்பு என்பதை அறிந்து கொண்டான்.

பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில் கூட்டிச் சொல்லெல்லாம் தெரியச் சொல்லி “நல்வரவு ஆகுக” என்று விளம்பரம் காட்டி அவனை வரவேற்றார்.