பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130சீவக சிந்தாமணி



“பத்தினிப் பெண் அப்படிப்பட்டவள் அல்ல; தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற சொல் காத்துச் சோர்வில்லாதவள்.”

“கணவனுக்காக அவள் உயிரையும் விடுவாள்” என்றான் அவன்.

“சரி என்ன ஆயிற்று? என்ன நடந்தது?”

“நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் வந்து கொண்டிருந்தோம்: தண்ணிர் வேண்டும் என்றாள் குடிக்க.”

“இதோ வருகிறேன்; இருக்க” என்று சொல்லிவிட்டுப் போனேன்.

“வந்து பார்க்கிறேன் அவள் நிழல் கூட அங்கு இல்லை.”

“நீ படித்தவனாக இருக்கிறாய்; இப்படிக் கலங்குவது சரியல்ல” என்று கூறினான்.

“உன் மனைவிதானே உனக்கு வேண்டும்! நான் ஒரு வழி சொல்கிறேன் கேள்” என்றான்.

“என்ன சொன்னாலும் செய்கிறேன்”

“அவள் பெயர் என்ன?”

“அநங்கமா வீணை” என்றான்.

யார் அவள் என்பதைச் சீவகன் அறிந்தான்.

“அந்தப் பெயரை உச்சரித்துக் கொண்டு கண்மூடிக் கொண்டு நில்; அதுவே தாரகமந்திரம்; தானாக அவள் வந்து நிற்பாள்” என்றான்.

இவன் இந்தப் புதிய நாம மந்திரத்தைச் செபித்துக் கொண்டு இருந்தான்.

வைராக்கியம் உடையவனைச் சந்தித்துத் தோல்வி கண்டு அதனால் சோர்வு கொண்டிருந்த அந்த வழிப்போக்கியைப் பார்த்துச் சீவகன் விளித்தான்.