பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134சீவக சிந்தாமணி



“என்னய்யா! உனக்கு ஒரு சின்னவீடு கேடா! நீரில் ஒளித்து வைத்தால் எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா” என்று உருமியது அந்தப் பெண் அன்னம்.

“அது உன் நிழல்” என்றது.

ஊடல் தீர்ந்தது; கூடல் நாடகத்தில் அவை இணைந்தன.

அதற்குமேல் அவனால் தனிமையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பிரிவு அவனை வாட்டியது.

தத்தையைவிட குணமாலைதான் அவனை மிகவும் வாட்டி விட்டாள்.

அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை.

தாய்க்கு அழும் குழந்தையைத் தான் எடுத்துக் கொள்ளத் தோன்றும்; தத்தை பிரிவைத் தாங்கிக் கொள்வாள்; குணமாலை வயதில் இளையவள்; அழுகை அவள் முத்திரை; பானை கண்டு மருண்டபோது அவலம் தான்; தொடர்ந்து ஒப்பாரி தான்; அவளை நினைக்கும்போது இவன் மனம் மிகுந்த வேதனையை அடைந்தது.

விரகதாபம் அன்று; ஆன்ம நேயம் என்றால் அது அதிகமான வார்த்தை; இணைப்பிணைப்பு: உள்ளம் உறவாடியது; இவன் நினைவு ஒரு உரு எடுத்து அவள் அருகில் செல்கிறது; பின்புறம் அணுகிச் சென்று மெல்ல நீவி அவளைத் தொட்டு அதிர்ச்சி அடையாதபடி அவளை மெல்ல அணைக்கிறான்; அது வெறுங்கனவு ஆகிவிடுகிறது.

சற்றுமுன் கற்ற இளைஞனுக்கு இவன் ஆறுதல் கூறி இருந்தான்.

“பிரிந்தவளை நினைத்து வேதனைப்படுகிறாய்; நீ படித்தவனா” என்று கேட்டான்.

அதே கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறான்.