பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150சீவக சிந்தாமணி



“இந்த வண்டுகள் பூக்களைச் சுற்றுகின்றன. பூக்கள் ஏன் வண்டினை நாடுவது இல்லை” என்று சிந்திக்கத் தொடங்கினான்.

‘கற்பு’ என்ற வரையறையை இந்தப் பூக்கள் பின் பற்றுவதால் அவை தாமே தேடிச் செல்வது இல்லை; காதலன் வரவை எதிர் நோக்கி நிற்கின்றன. மனிதச் சட்டம் அங்கு விதிக்கப்படாததால் அவை திரெளபதிகள் ஆகச் செயல்படுகின்றன; வரையாது அள்ளி எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன.

இந்தமானுடன் தான் இந்தக் கற்பு என்பதைப் பற்றிக் கழறுகின்றான்; அது அவன் உயர்ந்த மனோ நிலை என்று மதித்தான்.

தான் இப்படி இந்த வண்டுகளைப் போலப் புதிய புதிய மலர்களை நாடுவது தக்கதுதானா என்று சிந்திக்கத் தொடங்கினான். சட்டமும் சம்பிரதாயங்களும் தடுக்காத வரை அது தவறு இல்லை என்று முடிவுக்கு வந்தான்.

பந்து ஒன்று அவன் முன் வந்து விழுந்தது. யாரோ சிறு பிள்ளைகள் விளையாடுகிறார்கள் என்று அதை எடுத்தான் எடுத்துக் கொடுக்கலாம் என்று; பூப்பந்தாக இருந்ததால் அது பூவையர்க்கே உரியது என்று அறிந்தான்.

தோட்டத்தில் இருந்த பூங்கொடி ஒன்று அசைந்து வருவதைப் பார்த்தான். வந்த பூவிற்குச் சிறகுகள் முளைத்து விட்டன என்பதைக் கண்டான்; முதன் முறையாகப் பூ உலகில் இது ஒரு புரட்சி என்று நினைத்தான். வண்டை நோக்கிப் பூ வருவது புதுமையாக இருந்தது.

“வருக” என்றான்; அவனால் அவ்வாறு கூறாமல் இருக்க முடியவில்லை.

“தருக” என்று அவள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் கொடுத்திருப்பான்; அவள் மகிழ்ந்திருப்பாள்.