பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14சீவக சிந்தாமணி



என்ன சொல்வது? “உங்கள் கருத்து யாது?” என்று கேட்டான். “இல்லை என்று மறுத்துச் சொன்னால் என்ன?” என்று துணிந்து கேட்டான்.

“இதனை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்; நிழல் நிஜமாக ஆக முடியாது; சட்டம் இடம் தராது; அது மட்டுமல்ல; இது நம்பிக்கைத் துரோகம். மனைவியைப் பாதுகாத்துக் கொண்டிரு என்று சொன்னால் அவளை உடன் பிறந்த சகோதரியாக நினைக்க வேண்டும். அன்றி அவளை ஏன் தன் இன்பத்துக்குத் துணையாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைப்பது தவறு. தீட்டிய மரத்தையே கூர்பார்ப்பது போன்ற செய்கை இது; நீதி நூல்கள் இதற்கு இடம் தராது; பிறன் மனைவியை நினைப்பவன், கன்னியைக் காமத்தில் கலக்கியவன், நன்றி கொன்றவன், அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சன் இவர்கள் எல்லாம் இம்மையில் குட்ட நோயில் கெட்டு அழிவார்கள். இறந்த பின் நரகத்தில் இடர்ப்படுவார்கள்” என்று அறிவுரை கூறிப் பார்த்தனர்.

அவன் தேறுவதாக இல்லை; அவன் மைத்துனன் மதனன் கண் சிவக்கப் பேசினான்; “பண் மிகுக்க எங்களுக்கு ஏற்பப் பாட வேண்டியவர்கள் நீங்கள், அறம் சிறக்கப் பேசுவது தகாது; ஆண்டவர்கள் நாங்கள்; எங்கள் சொற்களைத் தாண்டிப் பேசுவது ஏற்க முடியாது; படை எடுத்துப் பாரைக் கட்டிக் காப்பது எம் திட்டம்; அதனால் சச்சந்தன் அடையப் போவதும் கட்டம்; இது எங்கள் இட்டம்” என்று கூறி முடித்தான். அவர்களைத் தடுக்க முடியாமல் போய்விட்டது அந்த அமைச்சர் வட்டம்.

போர்முரசு கொட்ட வைத்தான்; இரு திறத்துப் படைகளும் திரண்டன; அரசன் இருந்த அந்தப்புரத்தையும் அதைச் சுற்றி இருந்த அரணினையும் சூழ்ந்தனர். புகையைக் கண்டு நெருப்பு அணுகிவிட்டது எனச் சச்சந்தன்