பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாமகள் இலம்பகம்15



அறிந்தான். விசயையின் வயிற்றில் வளரும் மாணிக்கத்தைக் காக்கும் பொறுப்பினை உணர்ந்தான். வாள் கொண்டு போருக்குப் புறப்பட்டவன் ஆள் அனுப்பி விசயையை மயிற் பொறியில் ஏறிச் செல்லுமாறு அறிவித்தான். விசயை மயிலேறிச் செல்லும் முருகன் ஆனாள்; அது பறக்கும் தட்டாகப் பறந்து சென்றது; அக நகர் விட்டு விண் நோக்கிப் புறநகர் நோக்கிச் சென்றது; போர் மூண்டுவிட்ட செய்தியை அங்குச் செவியில் வந்துவிழுந்த பேர் ஒலி அறிவித்தது; அது அவலக் குரலாக மாறியது; அரசன் இறந்துவிட்டான் என்பதை அவளால் அறிய முடிந்தது. விசையை முடுக்க மாட்டாமல் விசயை அசைவற்றுப் போனாள்; பொறி தானாகக் கீழே இறங்கியது.

கதிரவன் கால் சாய்ந்து காரிருளைத் தோற்றுவித்தது. இருள் சூழ்ந்த சூழல்; தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஈம எரி ஒளி தந்து கொண்டிருந்தது. அழகியர் ஆடல்களைக் கண்ட அவள் பேய்கள் கூத்தினைக் கண்டாள். அவற்றின் நிழல்கள் எங்கும் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன; ஆந்தைகள் அலறின; கோட்டான்கள் கூவின; நரிகள் ஊளை இட்டன; அதனால் அந்த இடம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவிடம் என்பதை அறிந்தாள்; முற்றிய கரு வயிற்றில் இருக்க விரும்பவில்லை; மருத்துவர் உதவி வந்தால்தான் வெளியே தலை காட்டுவேன் என்று அது வேலை நிறுத்தம் செய்யவில்லை. இந்த உலகத்தைக் கண் திறந்து பார்க்க நினைத்தது.

அங்கேயே அவள் அக்குழந்தையைப் பிரசவித்தாள்; அதன் அழுகுரல் கேட்டு அவள் அகம் மலர்ந்தாள்.

அந்த இடுகாட்டில் நடு இரவில் அவளுக்குப் பக்கத்துணை யாரும் இல்லை என்பதைத் தெய்வமே தாங்கிக் கொள்ள விரும்பவில்லை. புறங்காட்டில் காவல் தெய்வமாக இருந்த பெண் தெய்வம் ஒன்று சண்பகவல்லி