பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30சீவக சிந்தாமணி



விட்டாலே அவளுக்குத் தாலி கட்டிவிடலாம் என்ற வெறி அவனிடம் இல்லை; காதலித்தவளையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்க் காதலை அவன் அறிந்தவன். அதனால் அவளை ஏற்க அவன் இசையவில்லை. அதை எப்படி நாகரிகமாகச் சொல்வது?

“ஐயா! என் நண்பன் பதுமுகன்; அவன் உன் மகளைப் பார்த்து இருக்கிறான்; அவளை மணப்பதற்கு அவன் ஆசைப்படுகிறான். பையன் அழகாக இருப்பான்; சொன்ன பேச்சுக் கேட்டு நடப்பான்; வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கத்தக்கவன்; அந்த மாதிரி இடம் வேண்டுமென்று அவன் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறான்; பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் அவனுக்கு நீண்ட நாள் ஆசை; அவள் சொன்னால் கேட்பான்; என் தந்தை கந்துக்கடன் கொஞ்சம் பிற்போக்குவாதி; செட்டிக் குடும்பத்திலேயே செட்டாக நகைபோட்டு வரும் திட்டமிட்ட சொத்து உடைய பெண்ணைத்தான் கட்டி வைக்க விரும்புவார்; அம்மா சம்மதிக்க வேண்டும். அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையே நான் மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உடையவர்கள்; சொத்துக் கணக்குகள் போட்டால் இந்தச் செட்டிமார்களோடு இடையன்மார்கள் நீங்கள் போட்டி போட முடியாது; உழவர்கள் நெல் விளைவிக்கலாம்; நீங்கள் பால்பண்ணை வைக்கலாம்; எனினும் இடைத் தரகர்களாக இருக்கும் வணிக மக்கள் தாம் பணக்காரர் ஆகி வருகிறார்கள். அவர்களோடு நீங்கள் போட்டி போடமுடியாது.

அதைப்பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டு அந்தப் பழக்கம் எனக்கும் வந்துவிட்டது. பதுமுகனுக்குத் தருவதாக இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்றான்.

“பெண்ணை ஒரு சொல் கேட்க வேண்டாமா?”