பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்49




“எனக்கு மட்டும் ஏன் இந்தப் புடைப்பு: உரல் போன்ற இடுப்பு; இது உங்களுக்குப் பிடிப்பு” என்று கேட்டாள்.

“நீதான் என் இருப்பு; அதற்கு இல்லை மறுப்பு; அதை விடு. அவளை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான்.

“கண்டவர் பேசிய பேச்சு என்னை உண்மையைக் காணாதபடி செய்துவிட்டது; அவளை ஏற்பதில் எனக்கு இகழச்சி இல்லை; அதில் ஏற்படும் பெரும் புகழ்ச்சி, ஊரவர் மருள, அரசனும் இதற்கு அருள, அழகிய மணி மண்டபம் அமைத்துத் தண்ணிர்ப் பந்தல் வைப்போம்.”

“தண்ணிர்ப்பந்தல் எதற்கு?”

“தவறுதலாகச் சொல்லிவிட்டேன்; மனப்பந்தல் வைப்போம்; சுயம் வரத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம்”.

“அப்படியானால் இவள் யாரை விரும்புகிறாளோ அவளை அவள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று தானே பொருள்.”

“ஆமாம்; அப்படித்தான்.”

“அவள் கொடுத்து வைத்தவள்; அந்த மாதிரி என் தந்தை ஏற்பாடு செய்திருந்தால் உங்களைத் தேர்ந்து எடுத்திருக்க மாட்டேன்” என்றாள்.

“ஆமாம் அரசர்கள் வந்து வரிசையாக நின்று உன் மாலைக்குக் கழுத்தை நீட்டி இருப்பார்கள்.”

“வேடிக்கையாகச் சொல்கிறேன்; அப்பொழுதும் உங்களைத்தான் தேர்ந்து எடுத்திருப்பேன்” என்றாள்.

இருவரும் சிரித்தனர்.

“இவளை நம் வீட்டில் தங்க வைக்கலாம்.”