பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68சீவக சிந்தாமணி



“உன்னுடைய தாயும் தந்தையும் யான் முன் அறிந்ததில்லை; நீயும் இதற்கு முன் யார் என்று தெரியாது; வானத்திலிருந்து பொழியும் நீர் வையகத்தில் விழும் போது செம்மண்ணோடு அது கலக்கிறது அதற்குப் பிறகு அதைப் பிரித்துக் காண முடியாது. அது போல நம் நெஞ்சம் தாமே கலந்து விட்டன” என்று பாராட்டினான். “காதல் என்பது தொடக்கத்தில் உடல் உறவால் ஏற்படுகிறது; எனினும் அது உள்ள உணர்வால் ஒன்றுபடுகிறது” என்று கூறி இல்லற இனிமையை நுகர்ந்தனர்.


4. குணமாலையார் இலம்பகம்

இராசமாபுரத்தில் வணிகக் குடியில் பிறந்த வனிதையர் குணமாலையும் சுரமஞ்சரியும் ஆவர். அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறக்கவில்லை; எனினும் அவர்கள் இரட்டையர் என்று சொல்லும்படி இணைந்து வாழ்ந்தனர். இருவரும் பெருங்குடி வணிகரின் மகளிர் ஆவர்.

நெருங்கிய நட்பினர்; ஆயினும் அவர்கள் உரையாடும் போது எதிர்க் கட்சிக்காரர்கள் போல் முரண் பட்டுப் பேசுவர்; எதற்கெடுத்தாலும் ‘ஒட்டு’ என்று கூறி வெட்டிப்பேசுவர்; வெற்றி பெறுபவள் மற்றவர்களுக்கு இது தர வேண்டும் என்று பந்தயம் வைத்து வேகமாகப் பேசுவது வழக்கம்.

ஒரு சிறு கதை; மயிலும் கருடனும் இணைபிரியாத சிநேகிதர்களாகப் பழகினர்; நாம் இருவரும் செறிந்த நட்பினால் நம்மையாரும் பிரிக்க முடியாது என்று பேசிக் கொண்டிருந்தன. பேசி முடிப்பதற்குள் அவற்றின் கண் முன்பு ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது: “அதை நான் தான் குத்துவேன்; எனக்குத்தான் சொந்தம்; நான் முதலில்