பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88சீவக சிந்தாமணி



“அவன் சீர்களை மறுத்துவிடு; அவன் பேரையே சொல்லாதே” என்றாள்.

“அவன் ஒற்றைக் காலில் நிற்கின்றான்; உன்னையே தான் கட்டிக் கொள்வேன் என்கிறான்.”

“மற்றொரு கால் என்ன ஆயிற்று?”

“அவனைக் கேட்டு வந்து சொல்கிறேன்; அவன் பெரிய பணக்காரன்; அது தெரியுமா?”

“அளவோடு தான் அன்று நம் வீட்டில் அவன் சாப்பிட்டான்”

“அவன் இப்பொழுது வீடு மனை தோட்டம் கடை காணி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்” என்றாள்.

“யானையிடமிருந்து என்னைக் காத்த வீரனுக்கே யான் மாலையிடுவேன்” என்றாள்.

“வீரனுக்கே மாலையிட்டால் நம் ஊர் செட்டிப் பிள்ளைகள் நிலை என்ன ஆவது?”

“ஈரமுள்ளவர் எத்தனையோ பேர் அவர்களுக்குத் தாரமாகக் காத்துக் கிடப்பார்; என்னை விடு” என்றாள்.

தந்தை வந்தார்; செய்தி சொன்னாள்.

“அவன் என்ன சாதி ?”

“நம்ம சாதிதான்”

“சாதிக்குள்ளேயே கொடுக்கக் கூடாது; கலப்பு மணம் தான் செய்விக்க வேண்டும் என்றிருந்தேனே”

“இது சாதி மணமும் இல்லை; கலப்பு மணமும் இல்லை; காதல் மணம்” என்று விளக்கம் தந்தாள்.

“என்னைவிட அவள் முன்னேறி விட்டாள்” என்று அவர் தம் கருத்தைக் கூறினார்.