பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96சீவக சிந்தாமணி


ஆசிரியர் அச்சணந்தி ஓர் ஆண்டு பொறுக்கவும் என்று கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

சிலுவையில் அறைய ஏசு நாதரை இந்த யூதர்கள் கட்டி இழுத்துச் செல்ல நினைத்தனர். அவர்கள் தன்மேல் கையை வைப்பதை அவன் தாங்கிக் கொள்ள விரும்பவில்லை.

அவன் நினைவுகள் சுதஞ்சணன் பக்கம் சென்றன. கூப்பிட்ட குரலுக்கு வராத வேலையாள், தாகத்தைத் தீர்க்காத தண்ணிர், தரித்திரம் அறியாத பெண்டிர், வறியவர்க்கு ஈயாத செல்வம், ஒழுக்கம் தராத கல்வி, ஆபத்துக்கு உதவாத நண்பர் இருந்தும் பயன் இல்லை என்று எண்ணினான்.

அந்த இடத்தை விட்டு அகன்று போக நண்பனின் உதவியைத் தான் நாடவேண்டும் என்று எண்ணினான். சுதஞ்சணனின் இடது கண் துடித்தது; நண்பன் இடுக்கண் உற்றிருக்கிறான் என்பதை அறிந்தான். காற்றும் மழையும் துணையாகக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு வந்து அவனைச் சுற்றியிருந்த காவலர் கண்ணில் மண்ணைத் தூவினான்.

அடுத்த கணம் சீவகன் அங்கு இல்லை. காவலர் அவனைத் தேடி அலைந்தனர். அவர்களுக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டான் என்று மதனன் அறிந்தான். வேறு வழியில்லை. கட்டி இழுத்து வந்தவனை வெட்டி வீழ்த்தி இருக்கலாமே என்று வருந்தினர்.

எப்பாவமும் அறியாத அப்பாவி ஒருவன் அந்த வழியே சென்று கொண்டிருந்தான். அவனை வெட்டிச் சிதைத்து அடையாளம் தெரியாமல் செய்து வைத்தான்.

கட்டியங்காரன் சீவகனைக் கட்டிப் பிடித்து வருவர் என்று காத்திருந்தான். கட்டிய கையினனாக அவனை வெட்டி முடித்து விட்டதாகக் கயிறு திரித்தான் மதனன்.