பக்கம்:சுயம்வரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

139

"என் நீண்ட நாள் ஆசையை ஒரே ஒரு நாளைக்காவது நிறைவேற்றி வைப்பாயா?" என்றான் அவன்.

"அவசியம் நிறைவேற்றி வைப்பேன். ஆனால் ஒரு நிபந்தனை; அது மாதவனுக்குத் தெரியக்கூடாது!" என்றாள் அவள். தான் சொல்வது பொய்யாயிருந்தாலும் அதை அவன் மெய் என்று நம்ப வேண்டுமே என்பதற்காக.

"அவன் முகத்தில் இனி யார் விழிக்கப் போகிறார்கள்?" என்று வீராப்புடன் சொன்ன அவன், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு 'விசிட்டிங் கார்'டை உடனே எடுத்து அவளிடம் கொடுத்து, "இந்தா, இதை வைத்துக்கொள்! இனி எனக்கும் உனக்கும் இடையே எந்த ரகசியமும் இருக்க வேண்டாம்!" என்றான் தன்னை மீறிய வேகத்தில்.

"இது எதற்கு?" என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

"இதில் உள்ள விலாசத்துக்கு நீ என்றாவது ஒரு நாள் அந்த மதனாவை இரவு நேரத்தில் அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டால்போதும், பொழுது விடிவதற்குள் அவள் தன்னைத்தானே கொன்றுகொண்டு விடுவாள்!"

அவன் இப்படிச் சொன்னதும் அவள் அந்தக் 'கார்'டை வியப்புடன் பார்த்தாள்; அதில் ஒரு முன்னாள் நீதிபதியின் வீட்டு முகவரியைத் தவிர வேறொன்றும் இல்லை.

"இது ஒரு மாஜி நீதிபதியின் மாளிகையல்லவா?" என்றாள் அவள்.

"ஆமாம், இப்பொழுதுகூட அந்த வீட்டைப் போலீசார் பார்த்தால் போதும்; அவர் வீட்டில் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, சட்டென்று இடது காலைத் தூக்கி வலது காலோடு 'டப்'பென்று ஓர் அடி அடித்து, 'சல்யூட்' வைக்காமல் போக மாட்டார்கள்" என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/142&oldid=1384870" இலிருந்து மீள்விக்கப்பட்டது