இந்தக் ‘கவர்ச்சி யுக’த்தில்
இப்படியும் ஒரு நீலாவா? - என்ன ஆச்சரியம்!...
19
|
அன்றிரவு மாதவன் வீடு திரும்பியபோது அவன் மாமா மகாலிங்கத்தின் குரல் உச்சக்கட்டத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஒரு பிள்ளையை அடக்கி வளர்க்கத் தெரியாத நீரும் ஒரு ஆண் பிள்ளையா? அவன் இஷ்டத்திற்கு எவளையோ காதலித்தானாம்; அவளை இவருக்குத் தெரியாமல் அவன் கலியாணமும் செய்துகொண்டானாம். அவனை இவர் இப்போது மன்னிப்பதைத் தவிர வேறு வழியில்லையாம். என்ன, கதையா விடுகிறீர், கதை?”
“இல்லை அப்பா, அத்தனையும் உண்மை. நானே அவளை அவருடன் பார்த்தேன். பார்த்த பிறகு... பார்த்த பிறகு... ”
நீலா முடிக்கவில்லை; “என்ன, சொல்லித் தொலையேன்!” என்றார் அவள் அப்பா.
“என்னைவிட அவள்தான் அவருக்குப் பொருத்தமானவள் என்று எனக்கே தோன்றிற்று, அப்பா!”
அவ்வளவுதான்; “அப்புறம் உனக்கும் எனக்கும் இங்கே என்ன வேலை? வா, போவோம்; வாடி, போவோம். இனி மேல் இந்த வீட்டுக்கும் நமக்கும் ஸ்நானப் பிராப்தம்கூட வேண்டாம்!” என்று கத்திக்கொண்டே மாமா வெளியே வர, அவரைத் தொடர்ந்து பெட்டியும் படுக்கையுமாக மாமியும் நீலாவும் வர, அவர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட வெட்கித் தலை குனிந்து நின்றான் மாதவன்.
அவனைக் கண்டதும் நீலா அவன் அருகே சென்று, “நான் வரேன், அத்தான்! நானும் என்னை அறியாமல் உங்கள்