பக்கம்:சுயம்வரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

55


அன்று மாலை சாந்திக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அவர் வெளியே போனாரே, அப்போது மாமாவை வழியில் சந்தித்திருக்கலாமல்லவா? சந்தித்து, வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கலாமல்லவா?

அப்படியே வரச் சொல்லியிருந்தால் என்ன? அவர் வந்தால்தான் என்ன? ஆனானப்பட்ட அம்மாவையும் அப்பாவையும் எனக்காக எதிர்த்து நிற்க முடிந்த அவரால், மாமாவையும் மாமியையுமா எதிர்த்து நிற்க முடியாது?

தன்னைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவே அவர்களைக் கண்டு பயப்படுவதுபோல் இவர் பாசாங்கு செய்கிறாரோ?

'இருக்கலாம்' என்று ஏன் நினைக்கக் கூடாது? 'இருக்காது' என்றுதான் ஏன் நினைக்கக் கூடாது?...

மாமாவுக்கு 'நீலா, நீலா' என்று ஓர் அசட்டுப் பெண் இருக்கிறாள் என்பதையும், அந்தப் பெண்ணைத் தன் தலையில் கட்ட அம்மா முயற்சி செய்கிறாள் என்பதையும் அவர் தன்னிடம் மறைக்கவில்லை; ஏற்கெனவே சொல்லி யிருக்கிறார். தனக்குப் பிடிக்காத அந்தப் பெண்ணுடன் அவராகவா சினிமாவுக்குப் போயிருப்பார்? மாமாவும் மாமியும் வற்புறுத்தியிருக்கலாம்; அதை அவரால் தட்ட முடியாமற் போயிருக்கலாம். அவளைப் போய் அவருடைய 'எதிர்கால மனைவி' என்கிறானே, இந்த ஆனந்தன்?

காதலுக்குக் கலியாணம் ஒரு முடிவாகவும் முட்டுக் கட்டையாகவும் இருந்ததெல்லாம் அந்தக் காலத்திலாம்; இந்தக் காலத்தில் இல்லையாம். அதனால் அவன் கலியாணமான பிறகும் என்னைக் காதலிக்கப் போகிறானாம். காதலித்துக் கொண்டே இருக்கப் போகிறானாம். இப்படி யெல்லாம் பேசும் இவனிடமிருந்து தப்ப என்ன வழி?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/58&oldid=1384679" இலிருந்து மீள்விக்கப்பட்டது