பக்கம்:சுயம்வரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

61


புகழ் பெற்ற பிரம்மசாரிகளில் சிலர், ஊருக்கு ஒரு பிள்ளையாகப் பெற்று வைத்துவிட்டு, 'நான் இன்னும் பிரம்மசாரிதான்' என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களே, அந்த மாதிரி!

எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும், அவன் தன் பலவீனத்தை மறைக்க முடியாத ஓர் இடம் இந்த உலகத்தில் உண்டு; அதுதான் பெண்கள் இருக்கும் இடம். அந்த இடத்தைக்கூட வென்றுவிடும் பண்பு மாதவனிடம் இருக்கிறது. ஆனந்தனிடமோ?...

அதுதான் இல்லை!

இவன் இவ்வளவு மோசமானவன் என்று தெரிந்திருந்தும், மதனாவிடமிருந்து அந்த மாதவனைப் பிரிப்பதற்காக இவனுடைய உதவியைத் தான் நாடினால், இவன் தன்னுடன் பேசுவதோடு நில்லாமல், தன்னையும் தொட்டுப் பார்க்கவல்லவா தொடங்கி விடுகிறான்?...

இவனிடம் ஏமாறுகிறவளா, நான்?

இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லையே என்னால்?....

என்ன செய்வது? இந்த மதனாவை அவனுடன் எப்படியாவது ஒரே ஒரு நாள், அல்லது ஒரே ஒரு இரவு கூட்டி அனுப்பி வைத்துவிட்டால் போதும், அந்த மாதவனை இவளிடமிருந்து பிரித்து விடலாம். அதற்குப்பின் அவனைத் தான் அடைவது அப்படியொன்றும் சிரமமாயிராது.

அது நடக்காவிட்டால்?...

'நடக்காவிட்டால்?' என்ன, 'நடக்கவே நடக்காது' போல் இருக்கிறதே, இவளிடம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/64&oldid=1384694" இலிருந்து மீள்விக்கப்பட்டது