பக்கம்:சுயம்வரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

83


போதாக் குறைக்குக் கல்லூரிகளில் வேறு பால் உணர்ச்சியைப் பற்றிய போதனையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். யாருக்கு யார் போதனை செய்வார்களோ? பேராசிரியர்களும் பேராசிரியைகளும், மாணவ மாணவி களுக்குப் போதனை செய்வார்களோ, மாணவர்களும் மாணவிகளும், பேராசிரியர்களுக்கும் பேராசிரியைகளுக்கும் போதனை செய்வார்களோ? - தெரியவில்லை!

தப்பித் தவறி அந்த இழவைப் போதிக்கத் தொடங்கிவிட்டால், மேநாட்டுக் கல்லூரிகள் சிலவற்றில் படிக்கிறார்களாமே - மாணவ மாணவிகள் தங்களுடைய காதலி, காதலன், குழந்தைகளுடன் - அந்த மாதிரி இங்கேயும் படிக்கத் தொடங்கிவிடுவார்களோ?

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு, நாகரிக வளர்ச்சிக்கு அதுதான் அடையாளம் என்றால் அந்த அடையாளம் இந்த நாட்டுக்கும் அவசியம்தானா, தேவைதானா?

அந்த நாகரிகத்தையும் முன்னேற்றத்தையும் நோக்கித் தான் ஆனந்தனைப் போன்றவர்களும், அவர்களை உருவாக்கி வரும் நவீன கலைகளும் போய்க்கொண்டிருக்கின்றனவா?

இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் மனிதவர்க்கம் வரை முறையின்றி வாழ்ந்து வந்ததாமே, ஒரு காலத்தில் - அந்தக் காலத்துக்கே போய்விடுவார்களோ?

அதைத்தானா இவர்கள் முன்னேற்றம் என்கிறார்கள்? அதைத்தானா இவர்கள் நாகரிகத்தின் வளர்ச்சி என்கிறார்கள்?

ஒன்றும் புரியவில்லையே!

கடமை வேண்டாமாம் இவர்களுக்கு; கண்ணியம் வேண்டாமாம் இவர்களுக்கு; கட்டுப்பாடும் வேண்டாமாம் இவர்களுக்கு. ஆனால் காதல் மட்டும் வேண்டுமாம், காதல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/86&oldid=1384774" இலிருந்து மீள்விக்கப்பட்டது