இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
சுரதா கவிதைகள்
கண்ணாலே பேசாமல் பேசு; கட்டிக்
கற்கண்டே! பூச்செண்டே! கரும்பே! என்றான்.
பெண்பறவை விழியாலே பேச லானாள்.
பேரழகன் கொக்கோகம் கற்றுக் கொண்டாள்.
✽✽✽
கண்ணாடி வாசலைப்போல் இருக்கும் கண்கள்
காதலிலே ஈடுபடும் நேரந் தன்னில்
வெண்தாழம் பூவாகும்; அன்பு காட்டும்
வேளையிலே வெள்ளிநிலா விளக்கு ஆகும்.
–இதழ் : இலட்சியவாதி (15–5–1958)
எண்ணில் பிறப்பது கணக்கு! இருவர்
கண்ணிலும் நெஞ்சிலும் பிறப்பது காதல்.
✽✽✽
கண்ணைப்போல் சிறந்ததொரு உறுப்பு இல்லை;
கண்ணைப்போல் சிறந்தகடல் உலகில் இல்லை;
கண்ணைப்போல் சிறந்ததொரு அழைப்பும் இல்லை;
கண்ணைப்போல் சுடும்நெருப்பு வாசல் இல்லை.
–இதழ் : இலட்சியவாதி, (15–5–1958)