இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
சுரதா கவிதைகள்
எப்போதும் உன்வாய் செவ்வாய்
எனக்குநீ என்றும் திங்கள்
இப்போதுன் சிரிப்பு வெள்ளி
இன்பந்தான் நமது பள்ளி.
–நூல் : துறைமுகம்.
மச்சம்
இறவாத புகழே சிறந்த எச்சமாம்.
தானே தோன்றும் தழும்பே மச்சமாம்.
–நூல் : சுவரும் சுண்ணாம்பும்.
இரத்தம்
முத்தும் பவளமும், உப்பும் சங்கும்
கடப்படு பொருளாம்; கனிந்த ரத்தமோ
உடல்படு பொருளாம்; உணவின் சாரமாம்!
✽✽✽
ரத்தமும் சிவந்த ரத்தத் துளிகளும்
நரம்புக் குழாய்களில் ஓடும் நதிகளாம்.
✽✽✽
ரத்தினம் கடையிலே! ரத்தம் உடம்பிலே
போருக்கும் ரத்தம்; புரட்சிக்கும் ரத்தம்
தந்தனர் என்பதே சரித்திரச் சத்தம்!
✽✽✽