பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சுழலில் மிதக்கும் தீபங்கள்


வெளியே செல்லும்போது உடுத்தும் சேலையிலும் அடக்க மில்லாத எடுத்துக்காட்டு மோகங்கள் என்று ஆடம்பரமாக வாழ்பவர்கள். ஆனால் ஒருத்தி கூட முழுசாகக் கல்லூரிப் பட்டம் எடுத்தவளில்லை. ஆனால் அவளுடைய தோற்றத்தில் கிரிஜாவின் எம். ஏ. பி. எட். பட்டம் இருந்த இடம் தெரியாமல் அழுந்தியே போய் விட்டது.

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை என்பது முற்றிலும் உண்மையன்று. ஆனால் பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் மனமும் எங்கோ தொலைந்து விட்டன. இவளுடைய மடிச் சேலைத் துணிகள், மாமியாரின் ஒன்பது கஜ நார்மடிப் பட்டு எல்லாம் உயர நடையின் நீண்ட கொடி யில் காய்கின்றன. அதனால் தான் வந்தனா அங்கு வருவதற்குத் தடை.

கொம்பில் தன் சேலை-பாவாடை முதலிய துணிகளைக் கொண்டு போய் வெளியில் வைத்துக்கொள்கிறாள்.

நீராடி ஈரம் சொட்டும் சேலையுடன் 'மடி'த் துணிகளை எடுத்துக் கொண்டு தலை துவட்டிக் கொள்ள வேண்டும். ஈரக் கூந்தலைச் சுற்றிய துண்டும் மடிச் சேலையுமாக மாமியாருக்கு. உலர் புடவை கொண்டு போகிறாள் இன்னொரு குளியலறையில்.

அப்போது தான் பொட்டு வைத்துக் கொள்ள மறந்தது நினைவுக்கு வருகிறது.

கண்ணாடியைப் பார்த்து அவசரமாக ஒரு பொட்டை, குங்குமச் சிமிழ் திறந்து தொட்டு வைத்துக் கொள்கிறாள். வயிற்றில் கபகபவென்று பசி, எரிச்சல் கிளர்ந்தெழுகிறது.

நறுக்கென்று சீஸ் பொதிந்த மொறு மொறு ஸாண்ட்விச்சை எடுத்துக் கடித்துக் கொண்டு, நாற்காலியில் சாய்ந்து சூடான காபியைச் சிறிது சிறிதாக ரசித்துப் பருகினால்.... வெட்டு!