பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சுழலில் மிதக்கும் தீபங்கள்


“ஹாய்...நீ இப்பவும் நடுங்கிட்டிருக்கியா? பாட்டி மடி மடின்னு இன்னும் உயிரை வாங்குறாளா?”

“அதெல்லாம் கேட்காதே. நான் இங்க வந்து இப்ப நிக்கிறது தெரிஞ்சா, சாப்பிட மாட்டாள்!”

“பட்டினி கிடக்கட்டும்! நீ ஏன் பயந்து சாகனும்?”

கிரியின் அடி நெஞ்சில் எங்கோ போய் அந்த வினா நெம்புகோல் போடுகிறது.

“மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாரா?”

“ஹம்...அதானே முக்கியமான ‘பாயிண்டா’ இருக்கு!”

“ம்...மேல் சாவுனிஸம்! கிரி. நீங்க இப்படிக் கோழையா இருப்பதாலதான் அவங்க மேலேயே இருக்காங்க...” கிரி பேசாமல் திரும்புகிறாள்,

பூசை வழிபாடு முடித்து, விழிகளை உறுத்துப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறாள் மாமியார். இலை போட்டு சாப்பாடெடுத்து வைக்க வேண்டும்.

“யார் வந்திருக்கா?”

“ரத்னா!”

வெறுப்பை உமிழும் பார்வையுடன் தலைத்துணியை இழுத்து இறுக்கிக் கொள்கிறாள். இது ஒரு கோபத்தை வெளியிடும் செயல்.

“வந்தா, அவளோட பேசிண்டு நின்னயாக்கும்! இங்க எதுக்கு வந்திருக்கு? சாதியில்லை சனமில்லைன்னு எவனையோ கூட்டிண்டு அக்கா வந்தது; இப்ப , தங்கை எவனைக் கூட்டிண்டு வந்திருக்கு? அசத்துக்கள். நம்ம வீட்டுல ரெண்டு பொங்களை வச்சிட்டிருக்கிறோம். இதுக சகவாசம் என்னத்துக்கு? தாலியில்லை, மூக்குத்தியில்லை...?”