பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சுழலில் மிதக்கும் தீபங்கள்


பதினேழு வருஷம் அடிமைச் சேவகம் செய்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்த இவளுக்கு ஒரு பேச்சு, ஒரு குரல் எழுப்ப உரிமை இல்லையா? அப்படியும் உரத்த குரல்கூட இல்லை. அந்த ஒரு பிசிறைக்கூட பொறுக்க முடியாத ஒரு கூடு இது...? ரத்னா கூறினாற் போன்று, இது எவ்வளவு மோசமான கடுமையான, வெளிக்குத் தெரியாத அடக்கு முறை? வசதியான வீடு, நவீனமான வாழ்க்கை வசதிகள் என்ற ஆடம்பரங்கள். ஒரு பெண்ணுக்குத் தன் உரிமைக் குரலின் இலேசான ஒலியைக்கூட எழுப்ப விடாத அழுத்தங்கள் வேறென்ன?

கூலிக்கு வைத்த ஆளிடம் கூடத் தவறு நேர்ந்தால் கேட்க முடியவில்லை.

ஸ்பூன் வைக்க மறந்தது. உப்பு அதிகமாகி விட்டது இரண்டு மன்னிக்க முடியாத குற்றம். இந்த வீட்டை அவள் தாங்கவில்லை.

ஒரு நொடியில் உதறிவிட்டுப் போயிருக்கிறான். சோற்றை எடுத்து வீசி, நீர்க்குப்பியைப் போட்டு உடைத்து...!

அவள் உழைப்பை, அவள் உள்ளுணர்வை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சத்தியத்தை உதாசீனமாக உடைத்தெறிவது போல நொறுக்கி விட்டுப் போய் இருக்கிறான்!

அவள் காலையிலிருந்து இரவு கண் மூடும் வரை யாரை முன்னிட்டு ஆணி அடித்த நிலையில் சுழன்றாளோ, அந்த அவன், அவளைத் துரும்பை விடவும் கேவலமாகக் கருதியிருக்கிறான், அவனுக்குக் கோபம் வரும்; அவன் கோபம் அவள் அறிந்ததுதான். அவனிடம் பச்சாதாபம் கிடையாது என்ப தையும் அவள் உணர்ந்திருக்கிறாள். அவளுக்குப் பொறுமை பெரிது. ஆனால் இப்போது?

அந்த பொறுமையின் அரணில் தீப்பிடிக்கிறது!