பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சுழலில் மிதக்கும் தீபங்கள்


இந்த வளையத்தை விடாமல் வைத்து இயக்கும் நங்கையின் உற்சாகத்துக்கு அளவேயில்லை. அவள் கணவனோ, சகோதரனோ தெரியவில்லை. ஓர் இளைஞன், நீராடலுக்கு இடையே படியில் அமர்ந்து காட்சிகளை ரசிக்கிறான்.

கிரிஜா தயங்கி நிற்பதைக் கண்டு, ‘ஆவோஜி ஹாத் பகட்லியே!’ என்று ஊக்குகிறான். ‘ஆவோஜி! ஆவோஜி!’ என்று நங்கை கைநீட்டிக் கோர்த்துக் கொள்கிறாள்.

மூழ்கு...! மூழ்கு....! கங்கை.. கங்கையே இது என்ன புத்துணர்வு? இதுதான் பேரின்பமோ? எல்லாத் துன்பங்களையும், எல்லாக் குழப்பங்களையும் அடித்துச் சென்று தெளிவும் துலக்கமும் தரும் இந்த ஒட்டம். இதில் போகாமல் பத்திரமாக இருக்கிறோம் என்ற கைப்பிணைப்புக்கள்.

மூழ்கி...! மூழ்கி...!

இவர்களைப் பிணைத்துக் கொண்டு நீரில் ஆடும் நங்கைக்குத் தலை முழுகத் தெரியவில்லைதான். ஆனால், ஆவோஜி ஆவோஜி! என்றழைத்துப் புதிய புதிய மக்களை வட்டத்தில் கோர்க்கிறாள். இளைஞர், சிறுமி, முதியவர். எல்லோருடைய அச்சத்தையும் விரட்டும், கை ஆதரவாய்ப் பிணைக்கிறாள். இங்கே மொழியும் இனமும், பிராந்தியமும் அடிபட்டு, ஒரே ஒட்டத்தில் சங்கமமாகின்றன.

இந்த நிமிடங்களாகிய நேரம். இந்த கைப்பிணைப்புக்கள் தரும் பத்திர உணர்வு. இந்த ஓட்டம். இந்தப் புத்துணர்வு தரும் நீராடல்.எல்லாம் சத்தியம். இங்கு தாழ்ந்த சாதி: உயர்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர், கிழக்கு மேற்கு வடக்கு, தெற்கு எதுவும் இல்லை. கரையில் ஏறியபின் மீண்டும் வந்து இந்தக் கைப்பிணைப்பில் இணைகின்றனர்.

‘...இதோ இருக்காளே? ஏம்மா? ஒருவார்த்தை சொல்விட்டு வரக்கூடாதா?...’

கிரிஜா திரும்பிப் பார்க்கிறாள்.