பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

125


ரூபகங்களை இவர் இயற்றியுள்ளார். இவற்றுள் ரத்தினாவளியும் பிரிய தரிசிகையும் உதயணன் காதற் கதைகளைக் கொண்ட நாடிககைள். நாகானந்தம் சாந்த ரஸத்தையும் போதிசத்துவரின் தியாகத்தின் சிறப்பையும் விளக்கும் நாடகமாகும்.

பவபூதி காளிதாசனுக்குப் பிறகு நாடகங்கள் எழுதிய கவிகளுள் சிறந்து விளங்குபவர். இவர் சுமார் 700 ஆம் ஆண்டிலிருந்தவர். பத்மபுரத்தில் பிறந்து வளர்ந்து பிறகு கான்யகுப்ஜ மன்னனான சோவர்மனின் ஆஸ்தான கவி ஆனார். இவர் எழுதிய ரூபகங்களுக்குள் மாலதி மாதவம் பிரகரண வகையைச் சார்ந்தது. மகா வீர சரித்திரம், உத்தரராம சரித்திரம் என்பவை நாடகங்கள், பின் சொன்ன இரு நாடகங்களும் முறையே இராமாயணத்தின் முன் கதையையும், பின் உத்தர காண்டக கதையையும பொருள்களாகக் கொண்டவை. உத்தரராம சரிதத்தில் பவபூதி சிறப்பித்தது கருணா ரசம். இதில் காளிதாசர் முதலிய எல்லோரையுமே பவபூதி வென்று விட்டார் என்பது இரசிகர்களின் கருத்து. பவபூதியை ஆதரித்த அரசன் யசோவர்மனும் ராமாப்யுதயம் என்றதோர் அருமையான இராமாயண நாடகத்தை இயற்றினான்.

விசாகதத்தர் அல்லது விசாகதேவர்:

இவர் ஒன்பதாவது நூற்றாண்டிற்கு முந்தி இருந்தவர். இவர் முத்திராராட்சஸம் என்னும் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார். அந்நாடகம் ஏழு அங்கங்களைக் கொண்டது. அரசாங்கப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டது. சாணக்கியன் தன் சூழ்ச்சியால் நந்தர்களிடம் ஒருதலையன்பு கொண்ட ராட்சசன் என்னும் மந்திரியைச் சந்திர குப்தனுக்கு மந்திரியாகும்படி மாற்றிவிடுகிறான். பலவகை அரசியல் சூழ்ச்சிகள் கையாளப்படுகின்றன. நடை மிகவுஞ் சிறந்தது; நடிப்பதற்குத் தகுந்தது.