பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

145


முக்கோண மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமும் 17 முழ நீளமுடையது. முக்கோணத்தின் உச்சியின் அருகில் நேபத்திய கிருகமும் அதற்கு முன்னர் ரங்க சிரஸும் இருக்கும். ரங்க சிரஸுக்கு முன்னாக ரங்க பீடம் முக்கோண வடிவமாக அமைந்திருக்கும். ரங்க பீடத்துக்கு முன்னுள்ளது பிரேட்சா கிருகம்.

பழைய நூல்களில் கோவில்களில் இருந்ததாகச் சொல்லப்பட்ட நாடக மண்டபத்தைப்பற்றி இங்கே சொல்லவில்லை.

நடிப்பு :

நேபத்திய கிருகத்தில் நடிகர்கள் வேடம் புனைந்து கொள்வார்கள். அவர்கள் என்ன வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும், என்ன ஆடை ஆபரணங்கள் தரிக்க வேண்டும் என்ற விஷயத்தை பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் தெளிவாய்க் கூறியிருக்கிறார். வர்ணத்தைப் பார்த்தாலே இந்த நாடு,இந்த சாதி என்று சொல்ல முடியும். முனிவர்கள் மரவுரியும், தேவர், அரசர் போன்றவர்கள் பகட்டான ஆடைகளும், மற்றவர்கள் வெள்ளை ஆடைகளும் அணிய வேண்டும். இடைப் பெண்கள் நீலநிறமுள்ள சேலை உடுக்கவேண்டும். அழுக்காடை துக்கம், தூரதேசப் பயணம், புத்தி மாறாட்டம் இவைகளைக் குறிக்கும். வெள்ளை ஆடை வழிபாடு, ஜபம் இவைகளுக்கேற்றது. விரித்த தலைமயிர் துக்கம், பைத்தியம் இவைகளுக்குஅடையாளம்.

விதூஷகர்களுக்கு வழுக்கைத் தலையென்று சொல்லியிருக்கிறது. கன்னிகள் தலைமயிர் பின்னி இருக்க வேண்டும். இம்மாதிரி அவரவர்கள் அணிந்து கொள்ள வேண்டிய நகைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த முறையில், நடிகர்களுடைய நிறம், ஆடை, ஆபரணங்களால், இவர் யார், இவருக்கு எந்த நிலை என்று அறிய முடியும். இதற்கு ஆஹாரிலாபிநயம் என்று பெயர். நடிகர்களின் பேச்சின் பொருளைக் கொண்டு, கதையைத் தெரிந்து கொள்ளலாம். அது வாசிகாபிநயம்

செ பெ.-l-9