பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

செந்தமிழ் பெட்டகம்


எனப்படும். அர்த்தத்தை விளக்க, முகபாவங்கள் காட்டுவது சாத்துவிகாபிநயம் என்று பெயர். அங்க பினியாசங்களால் அதைத் துவக்குவது அங்கியாபிநயம் என்று பெயர். சிவன் என்று சொல்லும் போது அதற்குத் தகுந்த முத்திரை காட்ட வேண்டும். அதேமாதிரி திருமால், பிரமன், முனிவர் முதலியவர்களையும் மலை,ஆறு, மீன், தாமரை போன்றவைகளையும் முத்திரையால் தெரிவிக்க முடியும். இது பரத நாட்டியத்திற்கு முக்கியமாயினும் நாடகங்களிலும் மிகுதியாகப் பயன்பட்டன. இதனால், நாடக மேடையில் காண்பிக்க முடியாத பல விஷயங்களை, நாடகக் கதையில் சேர்த்து, அவைகளை முத்திரை மூலமாய்ப் பார்ப்பவர்களுக்குச் சொல்ல முடிந்தது. சாகுந்தல நாடகத்தில், மேடை மேல் மான் ஒடுவதும், அரசன் நேரில் அதைத் துரத்துவதும், பின் விமானத்தில் வானத்திலும், மற்ற உலகங்களிலும் சஞ்சாரம் செய்வதும் எல்லாம் முத்திரையில் காண்பிக்க முடிந்தபடியால்தான் அவை நாடகத்தில் அமைக்கப்பட்டன.

நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் திரைக்குப் பின் பூர்வாங்கமென்பது நடைபெறும். முதலில் வாத்திய கோஷ்டியாருடன் கடவுள் தோத்திரமும், அரங்க பூசையும் செய்வர். அதற்குப் பின், சூத்திரதாரர் நாடகத்தைப்பற்றியும், அதை இயற்றியவரைப் பற்றியும் விளக்கம் சொன்ன பின்,நாடகம் தொடங்கும். நாடகத்தின் முடிவில் பரதவாக்கியமென்ற மங்களம் நடைபெறும்.