பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

செந்தமிழ் பெட்டகம்


இருந்தது என்பதில் ஐயமில்லை. அத்தகைய நுால் ஒன்றை பம்பாய் இராச்சியத்திலுள்ள கல்யாண் என்ற நாட்டை ஆண்ட, பூலோக மல்ல சோமேசுவரன் என்னும் சாளுக்கிய மன்னர் கி.பி. 1131-ல் வடமொழியில் இயற்றினார். அதன் பெயர் அபிலஷிதார்த்த சிந்தாமணி என்பதாகும். விழையும் பொருள்களையெல்லாம் வழங்கும் சிந்தாமணி என்பது அதன் பொருள்.

அந்த நூலில் விளக்கப் பெற்ற பொருள்களுடன், வேறு பல புதிய பொருள்களையும் சேர்த்து, கன்னட நாட்டிலுள்ள இக்கேரியில் அரசாண்டு கொண்டிருந்த பசவப்ப நாயக்க மன்னர் சிவதத்துவ தத்தினகரம் என்ற நூலை இயற்றினார். அதன் பின் இந்த நூல்களை ஆதாரமாக வைத்துப் பல சுருக்கமான நூல்கள் எழுந்தன. சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கல்கத்தாவில் ராஜா தாராகாந்த தேவர் நவீன முறையில் அகராதியாகவும் கலைக்களஞ்சியமாகவும் சப்தகல்பத்ருமம் என்ற நூலை வெளியிட்டார்.

பழைய ஏட்டுப் பிரதிநிதிகளிலிருந்த பிரபஞ்ச ஹிருதயம் என்ற சிறிய கலைக்களஞ்சியம் ஒன்றைத் திருவனந்த புரத்திலிருந்து வெளியிட்டுள்ளார்கள்; அதை ஆக்கியோர் யாரென்றும் , அதன்காலம் என்னவென்றும் தெரியவில்லை. தாாநாத தர்க்கவாசஸ்பதி என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்கத்தாவிலிருந்து வாசஸ்பத்தியம் என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். இது அகராதியாகவும் கலைக் களஞ்சியமாகவும் அமைந்து. விசாகப்படினத்திலிருந்து பரவஸ்து வெங்கடரங்கா சார்லு என்பவர், சப்தார்த்த சர்வஸ்வம் என்னும் நூலை 1859-ல் தொடங்கி 40 ஆண்டுகளில் முடித்திருக்கிறார். என்சைக்கிளோப்பீடியா பிரிட்டானிக்காவைப் போல சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இது உண்டாக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் அச்சேறவில்லை.