பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

31

புரிதல் வேண்டும், ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும், எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட்புகழை இயம்பிடல் வேண்டும்” என்பது அவரது வேட்கை இறைவன் புகழ் பாடுவதே பொருளுள்ள பாட்டு என்ற கருத்தை, “சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு, சீவர்கள் பாட்டெல்லாம் தெருப் பாட்டு,” என்றும், “நடராஜர் பாட்டே நறும் பாட்டு, ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும் பாட்டு” என்றும் “அம்பலப் பாட்டே அருட்பாட்டு, அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு” என்றும் அடிகளார் குறிப்பிடுகிறார்

இறைவனைக் கண்டு பேரின்பம் நுகர்வதற்காக வள்ளலார் முருகப் பெருமானை வழிபடு கடவுளாகவும் திருஞான சம்பந்தரைக் குருவாகவும் கொண்டார். அறுமுகப் பெருமானை நோக்கி அவர், “ஆறுமுகங் கொண்ட வையா, உள் துன்ப மனைத்தும், ஏறுமுகங் கொண்ட தல்லால் இறங்குமுகமில்லையால்” என்று உளம் நொந்து பாடுகிறார். பிழைகளை நினைந்து இறைவனிடம் கூறி வருந்தி முறையிடுவது திருவருட்பா வில் பரக்கக் காணலாம். உள்ளம் உருகில் இறைவன் உடனா வானன்றோ? திருவாசகத்தை அதனுடன் “கலந்து பாடிச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்தார். இவ்வாறு ஏற்பட்ட கடவுள் காட்சி நிறைவெய்தி இறைவனை அருட் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாக இவர் உள்ளத்தில் தோன்றச் செய்தது.

இறைவன் உண்டு என்ற உறுதியும் அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கடைப்பிடியும் திருவருட் பாவில் தெளிவாகக் காணப்பெறும், “உன்னை மறக்கில் எந்தாய் உயிரென் உடம்பில் வாழுமோ?” என்பது இவ்வுறுதியைத் தெளிவாகக் காட்டுகிறது.

இறைவனை அருட்பெருஞ்சோதியாகக் கொள்வதால் சமயங்களையும் மதங்களையும் கடந்த சமரச