100
செம்மொழிப் புதையல்
க.வா :- நீயே! என்னெனின் நீயே முதுமையும், அறிவின் திண்மையும் உடையை.
மு.வ :- நன்று, நல்லுணவாய தேன் நாடிச் சென்று கொணருநர் யாவராதல் வேண்டும்?
க.வ :- யான். யானே!
“இளைஞன் வலியன் ஏவின செய்யும்
உளையா முயற்சியன் ஒருவன் யானே.”
மு.வ :- மிகவும் நன்று. ஆகவே, நீ என்னை இதுபோது அரச ஈயாகவும் நின்னைத் தொழிலியாகவும் கருதிவிட்டனை யன்றோ?
க.வ :- ஆம் ஆம்.
மு.வ :-என்னே நின் அறியாமை இது முடிபாயின், நமது பண்டையகூட்டுக்கும், நாம் பேணிநின்ற. அரச ஈக்கும் நேர்ந்த குறை யாதோ? அன்றியும் நம் இருவர்மாட்டே, ஒருவர் தலைவராக ஒருவர் ஏவலிளைஞராதல் வேண்டும் என்பது பெறப்படுகின்றதன்றோ, ஆகவே, பல்லோர்கூடிய கூட்டத்துள் இவரன்ன தலைவராவா ரொருவர் வேண்டப்படுவதனை உரைத்தலும் வேண்டுமோ?
இதனைக் கேட்டலும் அவ்வீக்கு நல்லுணர்வு தோன்ற, அது மிக்க உவகை பூத்துத் தன் ஏனைய இனங்களை நோக்கிச் சிவ்வென்றெழுந்தது. அதுபோழ்து, ஏனைய ஈக்களெல்லாம் குழப்பம் செய்துகொண்டேயிருந்தன. அவற்றுட் சிலமட்டும் தம் வன்மையும், எழுச்சியும் குன்றாதிருந்தனவே யன்றிப் பிறவனைத்தும் குன்றிப் பசியால் வருந்தின. சிறிது பொழுது கழிதலும், சில தம் வழக்கப்படியே தேன் தேடச்சென்றன; சில தம் கூட்டை யடைந்தன.
இங்ஙனம் இவை பெருகுழப்பங் கொண்டு உழலாநிற்ப, இளமையும் ஊக்கமும் மிகுதியாக்கொண்ட பல ஈக்கள் புடைசூழ, அம்முதிர்வண்டு, நறுந்தேன்கொண்டு ஈயரசியிருந்த வெழிற் பெருங்கூட்டைச் சென்றடைந்தது. ஆண்டுக் காவல் புரிந்து நின்ற சிற்றியொன்று, அதனையுட்புக விடாது தகைந்தது.