பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

137


வகையால் அவரை வெளிநாடுகளுக்குத் துரத்தி விடுதல் மரபெனவும் கொள்க.

நிற்க, வேறுசிலர், மண்ணினின்றும் அழற் பொருள்கள் பல மேலே கிளர்ந்து சென்று, நாளாவட்டத்தில் வானவெளியிற்றிரிந்து நிற்பத் தற்செயலாக அவை ஒன்று கூடி ஒரு பேரழற் பிழம்பாயின; அப்பிழம்பே இஞ்ஞாயிறு, அப்பொருட்களுட் சில (அவையும் எண்ணிறந்தனவே) ஒன்று கூடாது, தனித்தோ, தம்போன்ற சில கூடித் திரண்ட சிறு பிழம்புகளாகவோ விண்மீன்களெனத் திகழ்கின்றன; இவைகள், காலம் நீடித்த காலை, வேறு சில அழற்பொருள் தம்முழை வந்துசேர, ஒருங்கே ஒளிபெறுவதுமுண்டு என்று கூறுவர்.

சிலர், நம்கட்புலனாம் ஞாயிற்றின்முன் வேறோர் ஞாயிறு இருந்ததெனவும், அது ஒரு காலத்துத் தன் ஒளிமுழுதும் ஒழிந்துமறைய, ஒரு திங்கள்காறும் உலகம் ஒளியின்றியிருந்தது; அப்போழ்தே, இஞ்ஞாயிறு தோன்றிற்று எனவுங் கூறுவர். வேறுசிலர், ஞாயிறு என்பது ஒர்பெறலரும் சீருஞ்சிறப்பு மமைந்து, பேரழகுவாய்ந்த பேரகமெனவும், அங்கு மக்கள் சென்று வாழ்தலுங்கூடுமென்றும் கூறி, அப்பேரகத்தின் மீது ஒரு வகைத்தான ஒளி, வெப்பம், நீர் முதலியவும் வேறு பிறவும் கலந்த மேகபடலம் சூழவுளதென்றும், அப்படலத்தின் செயலே இப்பூவுலகுபெறும் ஞாயிற்றொளியெனவும் கூறுப இவருட்டலையாயவர் ஹெர்ஸ்கேல் என்பவர்.

இம்முறையே, அவரவர் கூறியுள்ளவற்றைத் தேடிக் கொண்டே செல்வது விரிவுகாணுமாதலால், இதனை யிம்மட்டினிறுத்தி, இனி, இந்நிலம், ஞாயிறு, திங்கள் விண்மீன் முதலியவை தத்தம்நிலையிற்றிரியாது கொட்புறும் தன்மையையும், விரைவையும் பற்றியெழுந்த பெரியோர்களின் பலவேறு வகைப்பட்ட மதங்களையும் கூறி முடிவில், நம் நாட்டின் வரலாற்றையும் நோக்குவோம்.

ஞாயிற்றின் இயற்கையைப் பற்றிப் பல வேறு வகைப்பட்ட ஆசிரியர்கள் கூறியவற்றையும், அவற்றோரன்ன பிறவற்றையும் நாம் ஆராய்ந்து கொண்டே செல்லின், இத்தலைப் பொருள் முற்றுப் பெறல் அரிதாமாகலின், அவ்வாராய்ச்சியை