பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

141


உலகின் தோற்றம்

மேற்கூறியவாற்றான் மண், ஞாயிறு முதலிய உலகங்களின் பொதுவியல்புகண்ட அன்பர்கள் அவற்றின் தோற்றத்தைக்கான அவாவுவரன்றே! அவ்வவாவும் அறிவின்பாலதேயாம். ஆயினும், உலகின்றோற்றத்தைக் காண்டல் செல்லும் நாம் முதற்கண் நம் தோற்றத்தை யறிவோமாவென்பது வினா. அவ்வினாவிற்குப் போதிய விடையளிக்கவல்ல முடிபுகள் இதுகாறும் கிடைத்தில கிடைப்பதுமரிதே. அற்றேல், நம் நாட்டுப்பண்டைய முனிவர்களும், பெரியோர்களும் கண்டாய்ந்தவை என்னாயவோவெனின், அவை அவரவர்கள் கொண்டுசென்ற அறிவின்றிண் மைக்கேற்ப அமைந்துள்ளனவேயன்றி, எல்லாமக்களானும் கொள்ளப் பெறவில்லை. இன்னணமே பிறநாட்டார் கூறிய முடிபுகளும் அமைந்துள்ளன என்க. எனவே, இருதலையும் தூக்கி நோக்குங்கால் ஒரு வகை முடிவும் பெறுதல் அரிதாகின்றது. இத்தனையும் நோக்கியோ நம் நாவரையரும் "வந்தவா றெங்ஙனே? போமாறேதோ? மாயமாம் பெருவாழ்வு" எனத் திருவாய்மலர்ந்தது!

இங்ஙனம் நம் தோற்றமே மாயமெனின், நாம் நின்று நிலவும் உலகின் தோற்றமும் மாயமேயாம். ஆயினும், நம் நாட்டுப் பெரியோரது கொள்கையோடு பிறநாட்டுப் பெரியோர்களது கூற்றுக்களை நோக்கி மனத்தான் ஆராய்வோம்.