பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்பு, வரனென்னும் வைப்பு, பிறப்பொக்கும் சிறப்பொவ்வா, யாதும் வினவல் என்னும் இருபது கட்டுரைகள் இந்நூலை அணி செய்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு வகையில் சிறப்புற்றுத் திகழ்கின்றது. எல்லாக் கட்டுரைகளும் இலக்கிய மேற்கோள்களுடன் மேலைநாட்டு அறிஞர் பெருமக்களின் குறிப்புக்களுடன் மிளிர்கின்றன. எல்லாவற்றுக்கு மேலாக அந்தக் கட்டுரைகளில் தம் கருத்தினை ஒளவை அவர்கள் உறுதியுடன் நிலை நிறுத்தும் பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

உரைவேந்தர் ஒளவை அவர்களின் கட்டுரை நடை இனித்த தனித் தமிழில் இலங்குவதாகும். ஒருமுறைக்குப் பன்முறை ஆழ்ந்து தோய்ந்து படித்தாலன்றிப் பொருள் எளிதில் புலனாகாது. மெய்வருத்தக் கூலிதரும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். பொதுவாய்ப் பொருள் விளங்காத இடமெல்லாம் எழுதியவர் பிழையென்று எண்ணிச் சிலர் நிறைவடைவார்கள். தமக்கே முயற்சியும் திறனும் குறைவாயிருப்பதாற்றான் சில தொடர்கள் விளங்கவில்லை என்று படிப்போர் எண்ண வேண்டுமென்று என் இளம் பருவத்தில் பத்து வயதை நான் எட்டிய நிலையில் என் பாட்டனார் நகைபட விளக்கிக் கூறியது என் நினைவில் இப்போது நிற்கிறது. ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றிருந்தாலும் எமர்சனையும் தி குவின்சியையும் எடுத்த மாத்திரத்தில் படித்துப் பொருள் தெரியாமல் இளைஞர் தடுமாறுவது இயல்பு. நூற்றிலே ஒருவருக்குத்தான் அவை தெளிவாக விளங்கும் என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே, செம்பொருட் செறிவுடையதாய் செந்தமிழ்ப் பொலிவுடையதாய் விளங்கும் இக்கட்டுரைகளில் தோய்ந்து முயன்று படித்தல் வேண்டுமென்பதால் ‘செம்மொழிப் புதையல்' என்று பெயரை இந்நூலுக்கு அமைத்தோம்.

“என் போக்கில் யான் அறிந்ததை எழுதலை என் கடனாகக் கொண்டே உரை விளக்கங்களையும் பொருண்மைத் திறங்களையும் தொடர்ந்து வரைந்தேன். காலநிலை மாற, கருத்துக்களும் புது மாற்றத்தைப் பெறும். எனவே, என் நூல்களைச் சில ஆண்டுகள் கழித்து, மீள்பதிப்புக் கொணர்தலையும் நான் விழைந்தேனில்லை.

13