பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

155


குறிக்கோளை நன்கு வற்புறுத்துகின்றான். அவன் பிரிந்தவழி, அதனை அவன் மனையுறையும் மகளிர் பேசிக்கொள்வதால் நாம் இனிது அறியலாம்.


"அறந்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஆன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்.”


என்றும்,

"அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனைஇழை.”

என்றும் பொருளைக் கருதித் தமிழ்மகன் வாழ்ந்திருக்கின்றான். இவ்வண்ணம் தானும், தன் நாட்டு மக்களும் பொருட் குறைபாடின்றி இனிது வாழ்தல் வேண்டும்; நாட்டில் வறுமை தோன்றின், (நாட்டவர் மனத்தே நல்ல எண்ணங்கள் வற்றிவிடும்;) நல்லறிவு மாயும் என்று அஞ்சி, அவன், “செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கட் செல்வம்" என்று பிறர்க்கென வாழ்தலைப் பொருளாகப் பேணி வாழ்ந்து வந்தான்.

தான் ஈட்டிய பொருளைத் தானும் ஏனைத் தமிழ்மக்களும் பிறரும் பெற்று இன்ப வாழ்வு நடத்த வேண்டும் என விரும்பும் அத் தமிழ்மகனுக்கு வேறொரு கடமையும் உண்டாகின்றது. நாட்டுப் பகைவரால் உண்டாகும் கேடும் அச்சமும், வாழ்க்கையின்பத்தைச் சிதைக்கும் என்ற எண்ணங் கொள்கின்றான். அதனால், தன் நாட்டிற் காவல் குறித்துப் போர் செய்தற்கும், பிற வினை செய்தற்கும் அவன் உள்ளம் கொண்டு, அது குறித்து வினை செய்வதும் கடமை என்பதை உணர்கின்றான். தான் இளமையிற் பெற்ற கல்வி, நாட்டின் நலம் கருதிச் செய்வன செய்தற்குப் போதிய துணை செய்யாமை கண்ட வழி, நிரம்பிய கல்வி பெறுவதும் கடன் என்று தெளிகின்றான். ஒரு கால் ஒரு தமிழ்மகன் கல்வி குறித்துப் பிரிந்திருந்தபோது, அவன் பிரிவாற்றாது வருந்திய அவன்றன் மனைமகளிர், வாடைக் காற்றை நோக்கிக் கூறுவாராய், “ஏ, வாடைக்காற்றே,

தமியோர் மதுகை தூக்காய் தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காளை