பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

செம்மொழிப் புதையல்


கைத்தொழு மரபின் கடவுட் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின்

,

நீ, கரிகாலனோடு வாகையென்னுமிடத்தே ஒன்பது வேந்தர் ஒன்றுகூடி எதிர்த்தபோது, அவனால் அலைப்புண்டு தம் கொற்றக்குடை இழந்த அந்தப்

“பீடில் மன்னர் போல
ஒடுவை மன்னால் வாடைநீ எமக்கே.”

என்கின்றனர். இங்கே, தமிழ்ம்கன் மேற்கொண்ட கல்வியை, “கைதொழு மரபின் கடவுட்சான்ற செய்வினை" என்கின்றனர். அரசு முறையாயினும், வாழ்க்கை முறையாயினும் அவ்வதற்கு வேண்டிய கல்வியறிவு இல்வழிச் சிறவாது என்பதற்காகக்,

“காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறின் றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றா னாயின், வைகலும்
பகைக்கூழ் அள்ளல்பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.”

என்று இளந்திரையன் கூறுகின்றான்.

நாட்டின் காவல் குறித்துப்போருடற்றி உயிர்கொடுப்பது நல்வினையென்றும், அவ்வாறு உயிர்கொடுத்துப் புகழ் கொள்வாரே சிறந்தோர் என்றும் தமிழ்மகன் கருதியிருந்தான். அக்கருத்தை அவனேயன்றி, அவன் மகளிரும் இனிதறிந்து இருந்தனர். பகைவருடன் போருடற்றச் சென்ற தமிழ்மகன் - ஒருவன்றன் மனைமகளிர்,

“நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்”

என்று பேசிக் கொள்கின்றனர். இந்நெறியில் மகளிர் வீரத் தீ எரிய நிற்கும் உள்ளமுடையராதல் சங்ககாலத் தமிழ்மகள் இயலறியும் நெறியிற் புலப்படும்.

மனைவாழ்க்கையில் பொருளிட்டல், கல்வியறிவு பெறுதல், வினைசெய்து நாடுகாத்தல் முதலியன செய்தொழுகும்