பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

செம்மொழிப் புதையல்


வேண்டாப் பொருளாகவும் கருதினர். பழந்தமிழரிடையே நிலவிய நிரைகோடல் என்ற போர்த்துறைபோல, பாலை நில மறமக்கள் பகைவருடைய மகளிரைக் கவர்ந்துகோடலும் பின்பு அடிமைகளாக அவர்களை மேற்கொண்டு நடத்தலும் செய்து வந்தமையின், அவர்கட்கு மகப்பேற்றுள் பெண்களைப் பெறுதல் வெறுப்பையும் அச்சத்தையும் விளைவித்தது. பெண்ணினத்தின் பெருக்கத்தைக் குறைப்பது கருதிப் பெண் மகவுகளைத் தாம் வழிபடும் தெய்வங்கட்கு உயிர்ப்பலி செய்வதும் ஒருசில மக்களிடையே ஒழுகலாறாக இருந்தது.

அந்நாளில் நமது நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்களும் கிரேக்க யவன எகிப்தியர்களைப் போலப் பெண்களை மகப்பெறுங் கருவியும் கணவனுக்கு மனைக்கண் இருந்து பணி புரியும் அடிமையுமாகவே கருதினர். ஒருவன் பல மகளிரை மணத்தல் விலக்கப்படவில்லை; அரசர் ஐந்து மகளிரை மனைவியராகக் கொள்ளலாம். அவர்கட்கு மேலும் மகளிரை வேந்தர் வரைந்து கொள்வர்; ஆயினும் அவர்கள் மனைவியராகும் தகுதியின்றி உரிமை மகளிர் என்ற பெயரால் நிலவுவர். முதல் மனைவியிருக்க வேறொருத்தியை ஒருவன் மணக்க விரும்பின், முதல் மனைவியின் இசைவைப் பெற்றுத் தான் மணந்து கொள்வான். இவ்வழக்கு மேலை நாட்டிலும் இருந்தது. ஆபிரகாம் என்பவன் சாரா என்ற மனைவி யொருத்தி இருப்பவும் அவளது இசைவு பெற்று இரண்டாம் மனைவியாக ஆகர் என்பவளை மணந்து கொண்ட வரலாறு இதற்குச் சான்று பகருகின்றது.

ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும் பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதிப் பணிபுரிய வேண்டும் என்றும், மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்பவாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும், மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன் சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி வேட்டை நாய்கள் கடித்துத்-