பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

165


விருவர் வாழ்க்கையின் நலம் பேணி நின்ற நங்கை யொருத்திபோந்து, அவனைத் தெருட்டி அவனைக் கழறிக் கூறிய மனைவியின் உரிமைச் சிறப்பை எடுத்துக் காட்டலுற்று,

“ஒண்டொடி மடமகள் இவளினும்,
நுந்தையும் யாயும் கடியரோ நின்னே” [1]

என்று கூறியதாக ஆசிரியர் ஓரம்போகியார் உரைக்கின்றார்.

இல்லிலிருந்து அறம் புரிந்து ஒழுகுமிடத்துக் கணவன், பொருள் செய்தல், போர்வினை முதலிய மேற்கொண்டு சேறல் ஆகிய கடமை காரணமாகப் பிரிந்து செல்லவேண்டின், காதல் வழிநிற்கும் பிரிவுத் துன்பம் தோன்றி மனைவியின் மனத்தை வருத்துவது இயற்கை. காதலுக்கும் கடமைக்கும் இடையே நிகழும் போரில் கடமை வீழ்ச்சியுறின் அது காதல் வாழ்க்கையில் நல்குரவையும் வெறுப்பையும் விளைவித்துத் துன்பம் பயக்கும் என்பதைப் பழந்தமிழ்க் கணவனும் மனைவியும் நன்கு உணர்ந்திருந்தனர். கணவன் பிரியுங்கால் வற்புறுத்தும் சொற்களையே பற்றுக்கோடாகக் கொண்டு பிரிவுத் துன்பத்தை ஆற்றி மனைக்கண்ணே தாம் செய்வனவற்றை முட்டின்றிச் செய்தொழுகுவதே மனையுறை மகளிர்க்கு மாண்பும் கற்புமாம் என்பது தமிழ்மரபு.

மனையின்கண் வாழும் மகளிர் தாம் பெற்றமக்கட்கு மொழி பயிற்றும் முதற்கல்வி நல்கும்போதே அவர்களிடத்தே நல்லொழுக்கம் வேரூன்றி வளரச் செய்தல் தம் கடன் என்பதை உணர்ந்து ஒழுகுகின்றனர். விளையாடும் பருவத்தனான தன் மகனை நோக்கின ஒரு தமிழ்த்தாய், அவன் தந்தைபால் உள்ள குணநலங்களையும் குறைகளையும் எடுத்தோதி, குணங்களைக் கொண்டு குறைகளைக் கைவிட வேண்டுமென்று கற்பிக்கப் புகுந்த,

செம்மால்,
வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலைப்பாலுள் ஒத்தகுறி என் வாய்க்கேட்டு ஒத்தி,
  1. (ஐங், 98.)