பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

செம்மொழிப் புதையல்



இப்போது பழனியென வழங்கும் ஊர்க்கு முன்னாளில் திருவாவி நன்குடி என்றும் பழங்காலத்தில் பொதினி யென்றும் பெயர்கள் வழங்கின. அதனருகே ஆய்க்குடி யென்ற ஓர் ஊருளது; அதன் உண்மைப் பெயர் ஆவிகுடி என்பது. அதனைத் தலைநகராகக் கொண்ட அப்பகுதியில் ஆவியர் என்பார் வாழ்ந்தனர். அதனால் அதனை வையாவி நாடு என்பர்; பண்டை நாளில் அங்கே பெரும்பேகன் என்ற அரசன் ஆட்சி புரிந்தான். அவனை வையாவிக் கோப்பெரும்பேகன் என்பது வழக்கம்; அவனுடைய மனைவி பெயர் கண்ணகி என்பது. ஒருகால் அவனுக்கு வேறொரு பெண்ணின் தொடர் புண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு மனக்கவலை பெரியதாயிற்று. பேகன் அருள் உள்ளம் படைத்த பெருந்தகை; காட்டில் வாழும் மயில் ஒன்றுக்குப் போர்வை யித்த புகழாளன்: “படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்” என்று சான்றோர் அவனைப் பாராட்டுவது வழக்கம். அவனுக்கு அரிசில் கிழார், கபிலர், பரணர் என்ற சான்றோர் பலர் இனிய நண்பராவர். கண்ணகி அவர்கட்குப் பேகனது பரத்தைமையைச் சொல்லி அவனை அந்நெறியினின்றும் நீக்குமாறு முயன்றாள். ஒருகால் அவள் மனைக்குப் போந்த பரணர் என்ற நல்லிசைச் சான்றோர்க்கு,

“எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வியங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூரானே”[1]

என்று முறையிட்டனள். அவர்களும் அவளது வேண்டுகோட்கு இணங்கி, பேகனைக் கண்டு “வேந்தே, நீ மனையறம் மாண்புறச் செய்தல் வேண்டும்; நீ இன்றிரவே நின் மனையுறையும் கண்ணகிபால் சென்று அவள் எய்தி வருந்தும் துயரத்தைப் போக்கியருளல் வேண்டும்” என்பாராய்,

“அறஞ் செய்தீமே அருள்வெய் யோய்என
இஃதுயாம் இரந்த பரிசில், அஃது இருளின்
இனமணி நெடுந்தே ரேறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே.”


  1. புறம், 144.