பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

171


காதலன்புடைய மகளிர் உடன் வீழ்ந்து உயிர்கொடுக்கும் செயலை மேற்கொண்டனர். உயிர்கொடுப்போருள் மிக்க இளமை நலம் படைத்தவர் தீப்பாய்தலை விரும்பாத சான்றோரும் உண்டு. பூதப் பாண்டியன் இறந்தது கண்ட அவன் உயிர்க்காதலியான பெருங்கோப் பெண்டு அவனுடைய ஈமத்தியில் தானும் வீழ்ந்து சாதலுக்குத் துணிந்தாளாக, ஆங்கிருந்த சான்றோர் அவளை விலக்கி அறிவுரை பல கூறுவராயினர். அவர்களை வெகுண்டு,


“பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுக தில்ல எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.”

என்று பெருங்கோப் பெண்டு அவலித்து அரற்றினாள். உயிர்கொடுக்கும் ஆற்றல் இல்லாமையாலோ சான்றோர் பலர் விலக்கியதனாலோ கணவனை இழந்து உயிர் தாங்கியிருப்போர் கைம்மை நோன்பு மேற்கொண்டு கணவனுக்கு வழிபாடு செய்து ஒழுகுவர். இதனைத் தும்பையூர்ச் சொகினனார் என்ற சான்றோர்,

“அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை -
உயர்நிலை யுலகம் அவன்புக ஆர
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுத லானாக் கண்ணள்
மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே.”

என்று குறிக்கின்றார்.

கொழுநனையிழந்த குலமகளிர் மேலே குறித்தவாறு உடனுயிர் விடுதல், கைம்மை மேற்கொளல் என்ற இரண்டனுள் ஒன்றனை மேற்கொள்வரேயன்றி மறுமணம் செய்துகொள்வது இலர். பழந்தமிழ் மகளிர் மறுமணம் செய்துகொள்ளற்குப் பண்டைப் பொருளிலக்கண நூலார் விதிக்கவும் இல்லை! மறுமணம் செய்து கொண்ட வரலாறும் தமிழ் நூல்களில் இது காறும் காணப்படவில்லை. இம்மையிற் பிரிந்த கணவனை மறுபிறப்பில் பெறலாம் என்ற கருத்துநிலவும் சமுதாயமாதலின், பழந்தமிழிரிடையே மறுமணம் நிகழ்தற்கு வாய்ப்பு ஏது?