பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

179


இருப்பர். அப்போது திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்க வன்றொண்ட வயிராகி என்பவன் இருந்து வந்தான். சூறையாட வந்த வாணாதிராயர்க்கும் வன்றொண்ட வயிராகிக்கும் சண்டை உண்டாயிற்று. கோயில் சொத்துக்களைக் காக்கும் வகையில் வன்றொண்ட வயிராகி மிக்க வலியுடன் போர்செய்து வாணாதிராயரைத் தோற்றோட்ச் செய்து தானும் புண்பட்டு வெற்றி பெற்று விளங்கினான். ஊரவர் அவன் புண்ணையாற்றி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள் என்று இடையாத்தூர்க் கோயில் கல்வெட்டெர்ன்று கூறுகிறது. (P.S. ins. 380) இந்த வயிராகிகளுக்கு வீரமுஷ்டி என்று பெயர் வழங்கும். கோயில் பணிசெய்பவருள் வயிராகிகள் குத்துக்கும் சண்டைக்கும் முன்னின்று காத்த செய்திகள் பல கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. இவ்வரலாற்றை "உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி," என்ற பழமொழி குறித்து நிற்கிறது.

பண்டைநாளில் வீரர்கள் போர்செய்து புண்பட்டு இறந்து போவராயின், அவர்களுடைய பெயரையும் அவர் பெற்ற பெருமைகளையும் ஒரு கல்லில் எழுதி, அதை நீராட்டிப் பலபேர் செல்லகூடிய வழிகளிலும் ஆற்றங்கரையிலும் நிறுத்தி வைப்பது வழக்கம். அந்தக் கல்லைக் கல் நின்ற வீரனுடைய மனைவி நீராட்டி நெல்லும் பூவும் சொரிந்து அதைத் தன் கணவனாகவே எண்ணி வழிபடுவாள். இதை “ஒலிமென் கூந்தல் ஒண்ணுதலரிவை, நடுகல் தொழுதுபரவும்," எனப் புறநானூறு முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன. இதுபற்றியே "கல்லென்றாலும் கணவன்," என்ற பழமொழி உண்டாயிற்று. மேலும், கொல்லை களிலும் வயல்களிலும் கதிர்முற்றிவரும் பயிர்களுக்குக் காவலாகப் புல்லும் வைக்கோலும் கொண்டு ஆள்போல உருவம் செய்து வயல்வரப்புகளில் நிறுத்துவது வழக்கம். அதனைப் புல்லாள் என்பர். அதனிடத்தில் வீரச் செய்கை ஒன்றும். இல்லையாயினும் துலையில் வருபவர்க்கும் இரவில் வருபவர்க்கும் ஆள்போலத் தோன்றி ஒரளவு காவலாவதுபற்றி அப்புல்லாளை நிறுத்திவைப்பர். இவ்வாறே போர்க்குரிய ஆண்மையில்லாமல் வழிப்பறிசெய்து வாழ்பவரையும் புல்லாள் என்பது வழக்கம். இதைச் சான்றோர் “புல்லாள் வழங்கும் புள்ளலை வைப்பின் புலம்," என்று பதிற்றுப்பத்தில் குறித்திருப்பதைக் காணலாம். தன்னைக் கொண்டவன் நேரிய